உருவான ஆழ்ந்த காற்றழுத்தம்.. சென்னையில் கனமழை இருக்குமா? பாலச்சந்திரன் சொல்வதை நோட் பண்ணுங்க
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டிற்கு நல்ல மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதனால் சென்னைக்குக் கனமழை இருக்குமா என்பது குறித்து இந்திய வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியது முதலே கடந்த சில மாதங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள பல நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.

மழை: அதேநேரம் பெஞ்சல் புயல் காரணமாகத் தமிழ்நாட்டில் கடந்த மாத இறுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வடமாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதற்கிடையே இப்போது மீண்டும் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், சென்னைக்குக் கனமழை இருக்குமா என்பது குறித்து பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (10-12-2024) காலை 0830 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை - தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலச்சந்திரன்: இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், "காற்றழுத்த தாழ்வுப் பகுதி இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. அது மெதுவாகவே நகர்ந்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போதைய நிலையில் புயலாக மாற வாய்ப்பு இல்லை. இதன் பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எனப் புயலாக மாற பல நிலைகள் உள்ளன. இது இப்போதைக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மட்டுமே மாறியுள்ளது.
சென்னைக்குக் கனமழை இருக்குமா: இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். இது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகரும் போது, தமிழகத்தில் அந்தந்த இடங்களில் மட்டும் கனமழை பெய்யும். சென்னையில் பொதுவாக மிதமான மழையும் சில பகுதிகளில் அவ்வப்போது கனமழையும் இருக்கும்" என்றார்.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "இன்று கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வானிலை: நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிகக் கனமழை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications