6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. அடுத்த 3 மணி நேரத்திற்கு மஞ்சள் அலர்ட்! வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடை மிக கடுமையாக இருந்தது. இந்த ஆண்டு இதே போல இருக்கும் என்று பயந்த நிலையில், வெயில் எதிர்பார்த்ததை போலவே தீவிரமாக இருந்தது. வழக்கமாக வட மாவட்டங்களை சுட்டெரிக்கும் வெளியில் இந்த முறை கொங்கு மாவட்டங்களையும் சேர்த்து பதம் பார்த்தது. வேலூரை விட ஈரோட்டில்தான் அதிகம் வெயில் பதிவாகியிருந்தது.

இப்படி இருக்கையில் மே மாதம் தொடக்கத்தில் வானிலை அப்படியே மாறியது. தென் மாவட்டங்களில் முதலில் தலையை காட்டிய மழை, பின்னர் வட மாவட்டங்களையும் நனைக்க தொடங்கியது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக உருவெடுக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதாவது,
"மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று (24.05.2024) காலை 05:30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08:30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வங்கதேச-கேப்புப்பாராவிலிருந்து சுமார் 730 கி.மீ தெற்கு-தென்மேற்கேயும் மற்றும் மேற்குவங்காள- கேன்னிங்-லிருந்து சுமார் 750 கி.மீ தெற்கேயும் மையம் கொண்டுள்ளது.
இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுப்பெற்று, 25.05.2024 காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக 25.05.2024 இரவு வலுப்பெற்று, 26.05.2024 நள்ளிரவு தீவிர புயலாக வங்க தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குவங்காள கடற்கரையை கடக்க கூடும்.
தெற்கு கேரள மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது" என வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இன்று தமிழகத்தில் ஒரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில், இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.
இன்று அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
26 மற்றும் 28ம் தேதி அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும் / இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications