தமிழகத்தில் மாலை 6 மணி வரை.. 10 மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்'! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாலை 6 மணி வரை தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் கொடுத்திருக்கிறது.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இதனையடுத்து அடுத்த 1 மணி நேரத்தில் கோயம்புத்தூர், திருவாரூர், தஞ்சாவூரில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்றும் திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
முன்னதாக நேற்று வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "தமிழகத்தில் 23ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இதேபோல், அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°-42° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34°-39° செல்சியஸ் இருக்கக்கூடும். நாளை முதல் 24 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2° 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்" என கூறியிருந்தது.

அதேபோல இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "அடுத்த 5 நாட்களில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வெயில் அதிகரிக்கும்.
சமவெளி பகுதிகளில் குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸும்(104 டிகிரி ஃபாரன்ஹீட்), கடலோரப் பகுதிகளில் 37 டிகிரி(98.6 டிகிரி ஃபாரன்ஹீட்) மற்றும் மலை பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸ் (86 டிகிரி ஃபாரன்ஹீட்) என வெப்பம் உயரும்போது வெப்ப அலை ஏற்படுகிறது. மிக சரியாக சொல்வதெனில் இயல்பான வெப்ப நிலையை விட 4.5 டிகிரி செல்சியல் வெப்பம் அதிகரிக்கும் போது வெப்ப அலைக்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. இதுவே இயல்பை விட 6.4 டிகிரி செல்சியல் வெப்பம் அதிகரிக்கும் போது கடுமையான வெப்ப அலை ஏற்படும்.
தற்போது மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளிலும், கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகாரில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும். அதேபோல, ஒடிசாவில் இன்று வெப்ப அலை வீசும். ஜார்க்கண்ட் பகுதியில் ஏப்.25ம் தேதி வெப்ப அலைக்கான வாய்ப்பு இருக்கிறது.
இன்று தொடங்கி ஏப்.25 வரை கடலோர ஆந்திரா, ஏனாம், ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால், கடலோர கர்நாடகா மற்றும் கேரளா & மாஹே ஆகிய பகுதிகளில் வெப்பம் மற்றும் ஈரப்பதமான வானிலை நிலவும்.
இன்றைய வானிலையை பொறுத்த அளவில், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும். இரவு நேரத்திலும் வெப்பத்தின் தாக்கத்தை உணர முடியும். வழக்கத்திற்கு மறாக இந்த கோடையில் வெப்ப அலையின் தாக்கம் தீவிரமாக இருக்கும்" என் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications