தமிழ்நாட்டில் இன்னும் 7 நாட்களுக்கு மழை! ஆரஞ்ச் அலர்ட் விடுத்த வானிலை மையம்! நீலகிரிக்கு ரெட் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல இடங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை கொட்டித் தீர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் 12 - 20 செ.மீ வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதால் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வரும் 23ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த சூழலில் கோவை மாவட்டம் வால்பாறையில் பலத்த மழை கொட்டித் தீர்த்து வருவதால் அப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜூலை 18) விடுமுறை என்று கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை, குன்ஹா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தொடர் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரம் யாரும் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நீலகிரியில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை, மஞ்சூர், தோவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் தமிழக பேரிடர் மீட்புப்படையினர் முகாமிட்டுள்ளனர். இந்த ஒவ்வொரு குழுவினரும் உரிய மீட்பு உபகரணங்களுடனும் தலா 10 வீரர்களுடனும் தயார் நிலையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications