சென்னை+16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! காலை 10 மணி வரை உஷார்.. வானிலை மையம் வார்னிங்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தீபாவளி விடுமுறை முடிந்து மக்கள் இன்று பெருமளவில் சென்னை திரும்பியுள்ளனர். இந்நிலையில், இன்று காலை 10 மணி வரை சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அக்டோபர் மாதம் தொடங்கியதிலிருந்து சென்னையில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மையம், கொஞ்சம் கொஞ்சமாக வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது. இது சென்னையை நோக்கி வரும் என கணிக்கப்பட்டிருந்தது. அதேபோல சென்னை மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி வந்த இந்த காற்றழுத்த தாழ்வு மையமானது, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இது சென்னையை ஒட்டி கரையை கடந்தது. எனவே சென்னையில் கனமழை பெய்தது.

கனமழை காரணமாக சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. ரெட் அலர்ட் காரணமாக சென்னையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து வங்க கடலில் உருவான டான புயல், மழை மேகங்களை ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் நோக்கி இழுத்து சென்றது. இதனால் இடையில் சென்னையில் வெயில் பொளந்து எடுத்தது. இப்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளது.
தீபாவளிக்கு முந்தைய நாள் சென்னையில் ஒரு மணி நேரத்தில் சுமார் 9-10 செ.மீ வரை மழை பதிவாகியிருந்தது. இதனால் வில்லிவாக்கம் பகுதியில் பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது. இதனையடுத்து இன்று அதிகாலை முதல் சென்னையில் லேசான தூறல் போட்டியிருக்கிறது. இது குறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில், காலை 10 மணி வரை சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என தெரிவித்திருக்கிறது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications