அடேங்கப்பா அடிக்கும் வெயிலுக்கு.. 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெல்டா மற்றும் கொங்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்திருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், கரூர், திருப்பூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை என 5 மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை லேசான மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக விடுக்கப்பட்டிருந்த வானிலை அறிவிப்பில், "கடந்த 7ம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, 8ம் தேதி காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ் தாழ்வு பகுதியாக, வடக்கு-வடமேற்கு திசையில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக வலுகுறையக்கூடும். தற்போது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.
எனவே இன்று முதல் 14ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, நாளை வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து வெப்ப அளவின் வேறுபாடு: நாளை வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இன்று அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான முன்னறிவிப்பு:
இன்று (09-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications