ஆந்திராவுக்கு போன மழை யூடர்ன் எடுக்குதோ? திருவண்ணாமலை டூ குமரி வரை மஞ்சள் அலர்ட்
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது பரவலான மழையை கொடுத்து வருகிறது. தற்போது மழை ஆந்திரா பக்கம் நகர்ந்திருப்பதாக சொல்லப்படும் நிலையில், திருவண்ணாமலை தொடங்கி கன்னியாகுமரி வரை 7 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதாவது நேற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (20-12-2024) மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 12 மணி நேரத்தில், வடக்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு, இது அதற்கடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடகிழக்கு திசையில் நகரக்கூடும்.

எனவே இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
டிச.22 முதல் 24 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.25 மற்றும் 26ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வடதமிழக கடலோரப்பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை தொடங்கி டிச.24 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்: இன்று ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதே நேரம் இன்று இரவு 7 மணி வரை திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு என 7 மாவட்டங்களுக்கு லேசான மழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications