1992ம் ஆண்டு வெள்ளத்தை நினைவுப்படுத்திய நெல்லை பேய்மழை.. அப்போது என்ன நடந்தது?
நெல்லை: இப்போது நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த மழை மற்றும் வெள்ளம் 1992ம் ஆண்டு வெள்ளத்தை நினைவு கூர்ந்தது. 1992ல் ஏற்பட்ட வெள்ளம் நெல்லையில் அதீத பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நெல்லையில் நேற்று கொட்டித்தீர்த்த கன மழை, 1992-ம் ஆண்டு வெள்ளத்தை நினைவுபடுத்தியது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கடந்த சனிக்கிழமை எச்சரித்தது. அதன்படியே மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது.

முதலில் மிதமாக ஆரம்பித்த மழை, நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக மாறியது. நேற்று அதிகாலை முதலே 4 மாவட்டங்களிலும் தொடர் மழையாக மாறி வெளுத்தது. இடைவிடமால் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது . தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் ஓடுகிறது. இதனால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு கடுமையாக உள்ளது.
கடந்த 1992-ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த பலத்த மழை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் வரலாற்றில் மறக்கவே முடியாததாகும். தாமிரபரணி கரையோர குடியிருப்புகள், வயல்கள், தாழ்வான இடங்களை வெள்ளநீர் சூழ்ந்து மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.
ஏனெனில் அப்போது பாபநாசம் அணை, சேர்வலாறு அணை, பாபநாசம் கீழ் அணை, மணிமுத்தாறு ஆகிய அணை பகுதிகளில் 20 சென்டி மீட்டர் முதல் 31 சென்டி மீட்டர் வரை மழை பெய்திருந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த வெள்ளத்தில் 17 பேர் இறந்தனர். நெல்லை சந்திப்பு பஸ் நிலையமே அப்போது வெள்ளத்தில் மூழ்கியது.
இந்நிலையில் அதேபோன்ற மழை வெள்ளம் இப்போது பெய்திருக்கிறது. அம்பாசமுத்திரம் 41.6 செ.மீ, சேரன்மாதேவி 40.7 செமீ, மணிமுத்தாறு 31.7 செமீ, நாங்குநேரி 33.1 செமீ, பாளையங்கோட்டை 42 செமீ, காயல்பட்டினம் 92 செமீ, பாபநாசம் 35.2 செமீ, ராதாபுரம் 26.4 செமீ, திருநெல்வேலி 35.2 செமீ, சேர்வலார் அணை 26.9 செமீ, மழை பெய்தது.
தற்போது பெய்த மழையால் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அப்போது தண்ணீரில் மூழ்கியது போல் இப்போதும் பஸ் நிலையத்தை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதே போல் தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீர் அதிகளவு பெருக்கெடுத்து ஓடுவதால் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மக்கள் பரிதவித்து வருகிறார்கள். மின்தடை ஏற்பட்டுள்ளதுடன், பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications