”பெற்ற மகனானாலும் இதுதான் கதி” - ஊழல் செய்த அமைச்சரை ஊரைக் கூட்டி டிஸ்மிஸ் செய்த கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லியில் கட்டிட உரிமையாளரிடம் ரூபாய் 6 லட்சம் லஞ்சம் வாங்கிய டெல்லி உணவுத்துறை அமைச்சர் ஆசிம் கானை முதல்வர் கெஜ்ரிவால் அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து, "ஊழல் புகார் வந்தால் எனதுபெற்ற மகனாக இருந்தாலும் நான் பொறுக்க மாட்டேன்" என உணர்ச்சி பொங்கிட கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி ஆம்ஆத்மி அரசில் உணவுத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் ஆஷிம்கான் . இவர் உணவுத்துறையில் சிலருக்கு கான்ட்ராக்ட் விட்டதில் சிலருடன் பேரம் பேசியதாக புகார் எழுந்தது .
இது குறித்த எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டு மற்றும் ஒரு மணி நேரம் ஓடும் ஆடியோ டேப் ஒன்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கவனத்துக்கு வந்தது. இதனையடுத்து இந்த தகவல் வெளியே பரவும் முன்னதாக தாமே முன்வந்து அமைச்சரை நீக்குவதாக பத்திரிகையாளர்களை கூட்டி அறிவித்தார் கெஜ்ரிவால்.
பின்பு செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால், "அமைச்சர் ஆசிம்கான் மீது ஒரு ஊழல் புகார் வந்துள்ளது. இது தொடர்பாக எனக்கு ஆடியோ ஆதாரமும் கிடைத்தது. கட்டுமான தொழிலதிபர் ஒருவரிடம் உணவுத் துறை அமைச்சர் ஆசிம் அகமது கான் லஞ்சம் கோரியதாக அரசுக்கு புகார் வந்தது. அதற்கு ஆதாரமாக அமைச்சரின் உரையாடல் அடங்கிய ஆடியோ இணைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் ஆசிம் அகமது கானின் சொந்த தொகுதியான மதியா மஹாலில் கட்டுமான நிறுவன அதிபர் ஒருவர் அடுக்குமாடி கட்டிடம் கட்டி வருகிறார். அந்த கட்டிடப் பணிகள் தடையின்றி தொடர வேண்டுமானால் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் மிரட்டியுள்ளார்.
அதன்படி சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவன அதிபரும் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்துள்ளார். இதில் இடைத்தரகராக ஒருவர் செயல்பட்டுள்ளார். புகாராக அனுப்பப்பட்ட ஆடியோவை ஆய்வு செய்த பிறகு, அமைச்சர் பதவியில் இருந்து ஆசிம் கானை நீக்க முடிவு செய்தோம்.
இவர் மீது சி.பி.ஐ விசாரணை நடத்தவும் நாங்கள் பரிந்துரை செய்யவுள்ளோம் . ஆம் ஆத்மி அரசு, ஊழலுக்கு எதிரானது என்பது ஆசிம் அகமது கான் நீக்கத்தின் மூலம் புலப்படுத்தியுள்ளோம்.
எனது மகனாக இருந்தாலும் கூட ஊழல் புகார் வந்தால் நான் நடவடிக்கை தயங்க மாட்டேன். தப்பிக்க முடியாது . ஊழலை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதேபோல் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மகாராஷ்டிரா முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோரை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.