ஒடிஷாவில் இருந்து ஒட்டுமொத்த சீனாவுக்கும் குறி... சுற்றி வளைத்து வெளுக்க பலே திட்டம்!
ஒட்டுமொத்த சீனாவுக்கும் குறிவைத்து அக்னி ஏவுகணை 5 உருவாக்கப்பட்டு வருகிறது.
வாஷிங்டன்: சீனாவின் ஒட்டுமொத்த பகுதிகளையும் ஒடிஷாவில் இருந்து தாக்கி அழிக்கும் அக்னி ஏவுகணை- 5 உருவாக்கப்பட்டு வருகிறது.
சிக்கிம் எல்லையில் சீனா வாலாட்டிக் கொண்டு நிற்கிறது. பூடானின் டோக்லாம் பீடபூமியை கைப்பற்றி இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சிலிகுரி பிராந்தியத்துக்கு குறி வைத்திருக்கிறது சீனா.
இதனை எந்த விலை கொடுத்தேனும் தடுப்பதில் ராணுவமும் உறுதியாக உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் அணு அறிவியல் ஏட்டில் இந்தியாவின் அணு ஆயுத பலம் தொடர்பான கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
சீனாவுக்கும் குறி
இந்தியா வழக்கமாக பாகிஸ்தானை குறிவைத்துதான் அணு ஆயுதங்களை மேம்படுத்தி வரும். தற்போது சீனாவை இலக்கு வைத்து அணு ஆயுதங்களை நவீனப்படுத்தி வருகிறது இந்தியா.
7 அணு ஆயுத ஏவுகணைகள்
இந்தியாவிடம் மொத்தம் 7 வகையான அணு ஆயுத ஏவுகணைகள் உள்ளன. இவற்றில் 2 விமானம் மூலமாகவும் 4 தரையில் இருந்தும் ஒன்று கடலில் இருந்து ஏவும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன.
தயாரிப்பில் இன்னும் 4 ஏவுகணைகள்
அத்துடன் மேலும் 4 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகளையும் இந்தியா உருவாக்கி வருகிறது. கடலில் இருந்தும் மிக நீண்ட தொலைவுகளை இலக்கு வைத்தும் தாக்கக் கூடிய வகையில் இந்த ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்த ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும் என தெரிகிறது.
இந்தியாவின் அக்னி1, அக்னி 2 ஏவுகணைகளானது 2,000 கிலோ மீட்டர் தொலைவை இலக்கு வைக்கக் கூடியது. அதாவது சீனாவின் மேற்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தாக்கி அழிக்க முடியும்.
அக்னி 5
நாட்டின் வடகிழக்குப் பகுதியில் இருந்து அக்னி 4 ஏவுகணையை ஏவினால் சீனா தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட பகுதிகளை அழிக்க முடியும். அடுத்ததாக உருவாக்கப்படும் அக்னி 5 ஏவுகணையை தென்னிந்தியா (ஒடிஷா) மற்றும் மத்திய இந்தியாவில் இருந்து ஏவினால் அது 5,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை அழிக்குமாம். அதாவது ஒட்டுமொத்த சீனாவையே அழிக்க முடியுமாம்.
இவ்வாறு அமெரிக்கா ஏடு தெரிவித்துள்ளது.