தப்பி ஓடிய பசில் ராஜபக்சே இலங்கை திரும்பினார்! எந்த நேரத்திலும் கைது?
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரரான பசில் ராஜபக்சே மீண்டும் கொழும்பு திரும்பியுள்ளார். ஊழல் மோசடி வழக்கில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்த உடன் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார் பசில் ராஜபக்சே. அவர் மீது ஏராளமான ஊழல் மோசடி புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
‘திவிநெகும' என்ற அரசு நிதியிலிருந்து பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பசிலுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் இருந்து பசில் ராஜபக்சே நாடு கடத்தப்படக் கூடும் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் வேறு வழியில்லாமல் இன்று பசில் ராஜபக்சே கொழும்பு திரும்பியுள்ளார். பிடிவாரண்ட் நிலுவையில் இருப்பதால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது.