இளம்பெண்ணின் வாழ்க்கையில் ‘விளையாடிய’ வாலிபால் வீரர்…
சென்னை: ஒரே வீட்டில் மனைவி போல வாழ்ந்த தன்னை ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக சென்னையைச் சர்வதேச கைப்பந்து வீரர் மீது பெங்களூருவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகார் அளித்துள்ள பெண்ணின் பெயர் பிரியங்கா(26) என்பதாகும். இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வசித்து வருகிறார். சர்வதேச வாலிபால் விளையாட்டு வீரங்கனையான இவர் சென்னை கோடம்பாக்கம் அஜீஸ் நகரைச் சேர்ந்தவர் நவீன் (28) என்ற வாலிபால் விளையாட்டு வீரர் மீது மோசடி புகார் அளித்துள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை நேரடியாக சந்தித்து பிரியங்கா அளித்துள்ள புகார் மனுவில், நான் பெங்களூர், கிர்லாஸ்கர், லட்சுமி நகரில் பெற்றோருடன் வசிக்கிறேன். எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளேன். எனது தந்தை தொழில் அதிபர். எனது குடும்பம் கவுரவமான குடும்பம்.
விரட்டி விரட்டி காதல்
நான் சர்வதேச வாலிபால் விளையாட்டு வீராங்கனை. என்னைப்போல சர்வதேச வாலிபால் விளையாட்டு வீரர் நவீன், விளையாட்டு வழியாக எனக்கு பழக்கமானார். அவர் திடீரென்று என்னை காதலிப்பதாக கூறினார். அவரது காதலை நான் முதலில் ஏற்கவில்லை. ஆனால், தொடர்ந்து என்னை விரட்டினார். காலில் விழுந்து அழுதார். தனது கைகளில் பிளேடால் வெட்டி, ரத்தத்தை எடுத்து அதில் ‘ஐ லவ் யூ' என்று எழுதி காட்டினார்.
கணவன் மனைவி போல
தன்னுடைய காதலை ஏற்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வதாக கூட சொன்னார். நவீனின் காதலின் ஆழத்தை பார்த்து, நானும் அவரை காதலித்தேன். கடந்த 6 ஆண்டுகளாக நாங்கள் காதலர்களாக மட்டும் உலாவரவில்லை. கணவன்-மனைவியாக வெளி உலகத்தில் உலாவந்தோம். நாங்கள் ஒரே அறையில் கணவன்-மனைவியாக பலநாள் தங்கி இருந்துள்ளோம்.
குடும்பத்தாரிடம் அறிமுகம்
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நவீன் வீட்டில் நான் பல நாள் தங்கி இருக்கிறேன். அவரது தந்தையிடம் என்னை அறிமுகப்படுத்தினார். நான், அவரை எனது தந்தை உள்ளிட்ட குடும்பத்தினரிடம், நவீன்தான் எனது கணவர் என்று அறிமுகப்படுத்தினேன்.
சத்தியம் செய்தார்
சாமி படத்தில் சத்தியம் செய்து, என்னை அவரது மனைவி என்று எனது குடும்பத்தினரிடம் நவீன் சொன்னார். எனது நெற்றியில் குங்குமம் வைத்தும் சத்தியம் செய்தார். வாரத்தில் கடைசி நாட்கள் நவீன் பெங்களூர் வந்து எனது வீட்டில் என்னுடன் தங்குவார்.
சொந்த ஊருக்கு போனேன்
என்னை அவரது சொந்த ஊரான, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சுண்டங்கோட்டைக்கு அழைத்து சென்றார். அங்கு நடந்த அவரது சகோதரி திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அவரது ஊர்க்காரர்களிடம் என்னை அவரது மனைவி என்றே நவீன் அறிமுகப்படுத்தினார். அவரது குடும்பத்தினரும் என்னிடம் பாசமாக பழகினார்கள்.
300 சவரன் நகை
என்னை அவர்களது மருமகளாக ஏற்று, நவீனுக்கு என்னை ஊரறிய திருமணம் செய்து வைக்க, 300 சவரன் நகைகள், ஆடி சொகுசு கார், சென்னையில் ஒரு பங்களா வீடு வாங்கித்தர வேண்டும் என்று கேட்டனர். எனது பெற்றோருக்கு ஆண் பிள்ளைகள் இல்லை. அவர்களுக்கு இருக்கும் ரூ.8 கோடி மதிப்புள்ள சொத்தை எனக்குத்தான் தருவார்கள் என்றேன்.
வேறு பெண்ணுடன் திருமணம்
திடீரென்று எனக்கு தெரியாமல், கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றுபவரின் மகளை நவீனுக்கு திருமணம் செய்ய பேசி முடித்து, திருமண பத்திரிக்கையும் அடித்துவிட்டனர். வரும் 13ம் தேதி கோவையில் திருமணம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உன்னையும் திருமணம் செய்வேன்
இதுபற்றி நான் நவீனிடம் கேட்டபோது, என் பெற்றோர் பார்த்த பெண்ணை பெற்றோருக்காக மணந்து கொள்கிறேன். காதலுக்காக உன்னையும் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சர்வசாதாரணமாக சொன்னார்.
பெற்றோர் மிரட்டல்
என்னை ஒதுங்கிக்கொள்ளும்படி அவரது பெற்றோர், சிலருடன் பெங்களூர் வந்து என்னை மிரட்டினார்கள். நவீனுக்கு அவரது மகளை திருமணம் செய்து வைக்க துடிக்கும் கோவை போலீஸ் அதிகாரி என்னிடம் போனில் பேசி மிரட்டினார். எனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சுகிறேன்.
சட்டப்படி தண்டனை
நவீன் கோவை போலீஸ் அதிகாரியின் மகளை திருமணம் செய்வதை தடுக்க வேண்டும். அவர்தான் என்றைக்கும் எனது கணவர். அவர் எனக்கு கிடைக்காவிட்டால், கற்பனையில் கூட நான் வேறு ஒரு ஆடவரை கணவராக ஏற்கமாட்டேன். அவர் என்னை ஏற்காவிட்டால், அவர் எனக்கு செய்த துரோகத்துக்காக சட்டப்படி தண்டிக்க வேண்டும். என்று தனது புகார் மனுவில் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
நவீனிடம் விசாரணை
இந்த புகார் மனு மீது கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில், நவீன், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் 3 பேர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நேற்று காலையில் நவீனை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விரைவில் கைது
நவீனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிடாமல், டி.ஜி.பி. அலுவலக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தடுத்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும், நவீன் மீதான நடவடிக்கையில் உறுதியாக இருப்பதாகவும், அவர் மீதான புகார் தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து போலீசார் தெரிவித்துள்ளனர்.