இன்ஜினில் தொங்கிய சடலத்துடன் நெல்லை வந்த எக்ஸ்பிரஸ் ரயில்! பயணிகள் பீதி
நெல்லை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடல் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் இன்று நெல்லையில் நடந்துள்ளது.
பெங்களூரிலிருந்து நாகர்கோயில் செல்லும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 5.45 மணியளவில் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு சென்றது.
ஆனால், ரயிலை பார்த்து சீட் பிடிக்க ஓட வேண்டிய பயணிகளோ, பேயறைந்ததை போல காணப்பட்டனர். காரணம், ரயில் இன்ஜின் முன்பு அகோரமாக தொங்கிக் கொண்டிருந்த ஆண் சடலமாகும்.
ரொம்ப தூரத்துக்கு அந்த சடலம் ரயிலில் இழுத்து வரப்பட்டிருக்கலாம் என்பது பார்த்த உடனேயே புரிந்தது. ஏனெனில், கால்கள் துண்டாகி ரத்தம் வழிந்து நின்று போயிருந்தது. பேண்ட் கிழிந்து உள்ளாடையுடன் அந்த ஆண் சடலம் தொங்கிக் கொண்டிருந்தது.
தகவலறிந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரத்த கறை தொடங்கிய பகுதியை வைத்து பார்க்கும்போது, ஜங்ஷனில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவிலுள்ள தட்சநல்லூர் பகுதியில் அந்த வாலிபர் ரயில் முன்பு பாய்ந்திருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது. அந்த வாலிபரின் சடலம் பயணிகள் சிலரால் புகைப்படமாக எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
போலீசார் விசாரித்து வருகின்றனர்.