"டாடா இன்டிகேஸ்" ஏ.டி.எம்-ல் அத்தனையுமே கள்ளநோட்டுகள்- அதிர்ச்சியில் உறைந்த நெல்லைவாசிகள்!
நெல்லை: திருநெல்வேலி அருகே டாடா இன்டிகேஸ் ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளர்கள் எடுத்த பெரும்பாலான பணம் கள்ள நோட்டுகளாகவே இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த ஏ.டி.எம். மையத்தை போலீசார் பூட்டி சீல் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே இட்டமொழி மெயின்பஜாரில் "டாடா இன்டிகேஸ்" ஏ.டி.எம். மையம் உள்ளது. இப்பகுதியில் விஜய அச்சம்பாடு, பண்டாபுரம், பெருமவிளை, அழக்கப்புரம், சங்கரன்குடியிருப்பு, புதூர் உள்பட பல்வேறு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இதே ஏ.டி.எம். மையம் அருகே செல்போன் கடை நடத்தி வரும் சங்கரலிங்கம் என்பவர் காலையில் ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து ரூ1,000 எடுத்தார். இதில் 100 ரூபாயாக வந்த அனைத்து தாள்களும் கள்ள நோட்டாக இருந்தது.
அவரை தொடர்ந்து பி.எஸ்.என்.எல் ஊழியர் ஜெயமுருகன் என்பவர் எடுத்த ரூ4 ஆயிரம் முழுவதும் 100 ரூபாய் கள்ள நோட்டுகளாக இருந்துள்ளது. இதனைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த தகவல் காட்டுத் தீயாக அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இதை தொடர்ந்து அங்கு அதற்கு முன்னர் பணம் எடுத்தவர்கள் அனைவரும் தங்கள் பணத்தை ஆய்வு செய்தனர்.
அப்போதுதான் இந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்த பலரும் தங்களிடம் இருப்பது 'கள்ள நோட்டு'களே என்பதை தெரிந்து அதிர்ந்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் 'கள்ள நோட்டு' ஏ.டி.எம். மையத்தை முற்றுகையிட்டனர்.
இந்த தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் கள்ள நோட்டுகளை பறி்முதல் செய்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குத் தகவல் தெரிவித்து விசாரணைக்காக ஏ.டி.எம். மையத்தை பூட்டி போலீசார் சாவியை எடுத்து சென்றனர். இதுகுறி்த்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications