எம்.ஜி.ஆர் நலம்பெற ஏரி காத்த ராமரை விரதமிருந்து வழிபட்ட ஜெயலலிதா
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சுகவீனம் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் குணமடைய வேண்டி ஏராளமான மக்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றியிருந்த போது விரதமிருந்து வழிபாடு நடத்தியுள்ளார். மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவிலில் வழிபட்டதாக தனது வாழ்க்கை குறிப்பில் எழுதியுள்ளார்.
1984 ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் நள்ளிரவில் சேர்க்கப்பட்டார். மறுதினம் எம்.ஜி.ஆருக்கு பக்கவாதம் தாக்கியது. ஒரு பக்க கை கால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. சிறுநீரகப்பிரச்னை வரவே, அமெரிக்காவின் டவுன்ஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.
அப்போது ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த ஜெயலலிதா, சத்துணவு உயர்மட்டக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார். ஜெயலலிதாவிற்கு கட்சிக்குள் நெருக்கடிகள் அதிகரித்தன. எம்.ஜி.ஆரை பார்க்கவிடாமல் அப்போலோவிலிருந்தே தங்கள் அரசியலை துவங்கியிருந்தது ஜெயலலிதாவின் எதிர் அணி. அவர் அமெரிக்கா புறப்பட்டு செல்லும் வரை ஜெயலலிதாவினார் எம்.ஜி.ஆரை பார்க்க முடியவில்லை. இன்றைக்கும் மருத்துவமனையில் உள்ள ஜெயலலிதாவை யாராலும் பார்க்க முடியாத சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது.
அமெரிக்வில் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட உடன் அவருக்காக தமிழக கோவில்களில் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நடந்தன. எம்.ஜி.ஆருக்காக ஜெயலலிதா மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவிலில் வழிபாடு நடத்தினார். இதனை ஜெயலலிதாவே குறிப்பிட்டள்ளார்.
எம்.ஜி.ஆருக்காக வழிபாடு
5.11.1984 ஆம் ஆண்டு தலைவர் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். தலைவர் நலம்பெற வழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாட்டில் தலைவரை நினைத்து என் கண்கள் குளமாகின. அரசியலில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர்களில் ஒருவர் (இந்திரா காந்தி) மறைந்தார். இன்னொருவரான என் தலைவர் அமெரிக்க மருத்துவமனையில் இருக்கிறார் என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
ஏரி காத்த ராமர்
பெரும் வெள்ளத்திலிருந்து ஒரு ஊரையே காத்த ராமருக்கு ஒரு ஆங்கிலேய கலெக்டர் எழுப்பிய கோவில்தான் ஏரி காத்த ராமர் கோவில். சென்னை - திண்டிவனம் நெடுஞ்சாலையில், மதுராந்தகம் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது ஏரிகாத்த ராமர் கோயில். இங்கு உள்ள இறைவனின் திருப்பெயர் கோதண்டராமன். அவரைத்தான் 'ஏரிகாத்த ராமர்' என்று அழைக்கிறார்கள். இறைவியின் திருப்பெயர் ஜனகவல்லித் தாயார்.
கோதண்டராமர்
இந்த கோவிலில் மூலவர் ஸ்ரீ ராமர் சீதாதேவியின் கைகளைப் பற்றியவாறு, நின்ற திருக்கோலத்தில், கோதண்டராமராகக் காட்சி தருகிறார். ஆஞ்சநேயர், இந்த கோவில் கர்ப்பகிரஹத்திற்குள் இல்லாமல் கோயிலுக்கு வெளியே புஷ்கரிணியின் கரையில் தனிக்கோயில் கொண்டுள்ளதும் இந்த கோவிலின் விசேஷம்.
பொதுவாக மற்ற கோவில்களில் சீதை, ராமபிரானுக்கு சற்று தள்ளி நிற்பது போலவே, சிலைகள் வடிக்கப்படுவதுண்டு. இந்தக் கோயில் மூலஸ்தானத்தில், சீதையின் கைகளைப் பற்றிய நிலையில் ராமன் நிற்கிறார். அருகில் லட்சுமணர் இருக்கிறார். ராமர் விபண்டகருக்கு காட்சி தந்தபோது, சீதையின் மீதான அன்பினை வெளிப்படுத்தும் விதமாக இவ்வாறு காட்சி தந்ததாகச் சொல்வர்.
ஏரியை காத்த ராமர்
பெரும் வெள்ளம் ஏற்பட்டபோது ஏரி நிரம்பி உடைந்து விடாமல் இருக்க ராமபிரானே தன் தம்பி லட்சுமணனுடன் ஏரியை காத்து நின்றார் என்கிறது தல புராணம்.
சம்பவங்கள் இன்று அந்த ஆலயத்தின் கல்வெட்டிலும் உள்ளது. "இந்த தர்மம் கலெக்டர் லியோனெல் ப்ளேஸ் துரை அவர்களது" என்ற வாசகத்தை இன்றும் அந்தக் கல்வெட்டில் காணலாம்.
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா
அன்று எம்.ஜி.ராமச்சந்திரனுக்காக ஏரி காத்த ராமர் கோவிலில் விரதமிருந்து வழிபட்டார் ஜெயலலிதா. இன்று அவருக்காக தமிழ்நாடு முழுவதும் பக்தர்கள் வழிபடுகின்றனர். நோயில் இருந்து எம்.ஜி.ஆர் மீண்டு வந்தது போல முதல்வர் ஜெயலலிதாவும் நலமுடன் திரும்பி தமிழகத்தை ஆள வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும்.