முன்பக்கம் உடைந்து தாறுமாறாக ஓடிய பஸ்.. டிரைவர் சாமர்த்தியத்தால் பயணிகள் தப்பினர்
நெல்லை: அரசுப் பேருந்தின் முன்பக்க மெயின் பட்டை உடைந்து தாறுமாறாக ஓடிய அரசு பஸ்சில் பயணித்த ஸ்ரீவைகுண்டம் பகுதி பயணிகள் பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்துள்ளனர்.
திருநெல்வேலி அரசு போக்குவரத்துக்கழக பணிமணையின் சார்பில் திருநெல்வேலியில் இருந்து சாத்தான்குளத்திற்கு தடம் எண் 264 என்ற அரசு பஸ்(வண்டி எண் டி.என்.72 என் 1222) நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் விஜயநாராயணம் வழியாக உவரி சென்று அங்கிருந்து திசையன்விளை வழியாக சாத்தான்குளம் வரும்.
பின்னர் சாத்தான்குளத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக திருநெல்வேலி புதிய பஸ் நிலையம் செல்லும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் இந்த பஸ் இந்த வழித்தடத்தில் இருமுறை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பஸ் வழக்கம்போல சாத்தான்குளத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஸ்ரீவைகுண்டத்திற்கு வந்தது.
ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி செல்வதற்காக ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பயணிகள் அதிகளவில் ஏறினர். 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்த பஸ் மதியம் 12.30மணியளவில் பாளையங்கோட்டை பஸ் நிலைய சிக்னல் பகுதியில் திரும்பும்போது பஸ்சின் முன்பக்க மெயின்பட்டை 'டமால்' என்ற பயங்கர சத்தத்துடன் உடைந்தது.
மெயின்பட்டை உடைந்த வேகத்தில் பஸ் தாறுமாறாக ஓடியதைக்கண்ட பயணிகள் உயிர் பயத்தில் அலற, சுதாரித்த டிரைவர் பஸ்சை சாமர்த்தியமாக பிரேக் போட்டு நிறுத்தினார். ரோட்டில் யாரும் நடந்து வராததால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. பஸ்சில் இருந்த பயணிகளுக்கு மட்டும் சீட்டில் முட்டி மோதியதால் லேசான காயங்கள் ஏற்பட்டது.
இந்த பஸ்சில் பயணித்து உயிர் பிழைத்த ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பஸ் பயணி கோபாலகிருஷ்ணன் கூறியதாவது, அரசு பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் டப்பா பஸ்களாகவே இருக்கிறது. சரியான பராமரிப்பு இல்லாத ஓட்டை, உடைசல் பஸ்களை இயக்க டிரைவர், கண்டக்டர்கள் மறுத்தாலும் அதிகாரிகள் அவர்களை கட்டயாப்படுத்தி இயக்க செய்கின்றனர்.
இப்படி பயணிகளின் உயிர்மீது அலட்சியம் காட்டும் போக்குவரத்துக்கழக அதிகாரிகளால் இதுமாதிரியான விபத்துக்களில் அப்பாவி பயணிகள் பலியாகின்றனர். எதுஎப்படியோ இறைவனின் கருணையாலும், டிரைவரின் சாமர்த்தியத்தாலும் இன்று இந்த விபத்தில் இருந்து உயிர் பிழைத்துள்ளேன். இனியாவது போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அரசு பஸ்களை சரியானமுறையில் பராமரித்து இயக்குவதற்கு முன்வரவேண்டும் என்றார்.
நேற்று நடந்த விபத்தில் அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓட்டிச்சென்ற இதுமாதிரியான முறையான பராமரிப்பில்லாத அரசு பஸ்சின் ஆக்சில் திடீரென்று உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இந்த விபத்தால் சஸ்பென்ட் செய்யப்பட்டிருந்த டிரைவர் சமீபத்தில்தான் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் இவர் ஓட்டிச்சென்ற முறையான பராமரிப்பில்லாத அரசு பஸ்ஸின் மெயின் பட்டை உடைந்து விபத்துக்குள்ளானபோதும் அவரின் சாமர்த்தியத்தால் பஸ்சில் இருந்த 50க்கும் மேற்ப்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.