காதலித்து ஏமாற்றிய மாணவர் - தற்கொலை செய்த மாணவி
நாகர்கோவில்: நாகர்கோவிலில் மாணவர் ஒருவர் காதலித்து ஏமாற்றியதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலை அடுத்த மேலகிருஷ்ணன் புதூர், பிள்ளையார் காலணியை சேர்ந்தவர் லிங்கசாமி. இவரது மகள் அஜிதா இவர் கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு கலை கல்லூரியில் பி.காம் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு தினமும் வீட்டில் இருந்து பஸ்சில் சென்றுவந்தார்.
மாலையில் வீடு திரும்பிவிடுவார். இந்த நிலையில் மாலை வழக்கம் போல் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்தவர்கள் அவரிடம் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய் என கேட்டனர்.
அதற்கு பதில் கூற மறுத்த அஜிதா, திடீரென வீட்டில் இருந்து அவசர, அவசரமாக கிளம்பி வெளியே சென்றார். சிறிது நேரத்தில் அவர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவரது கால்கள் தடுமாறின. தள்ளாடியபடி வந்த அஜிதா வீட்டின் முற்றத்தில் வந்ததும் அப்படியே வாந்தி எடுத்த படி மயங்கி விழுந்தார்.
இதை கண்ட பெற்றோர் பதறியடித்து ஓடி வந்தனர். அவர்கள் அஜிதாவை அப்படியே காரில் தூக்கிப்போட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அஜிதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அவரை பரிசோதித்து பார்த்த போது அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. அஜிதாவின் தற்கொலைக்கு காரணம் தெரியாமல் தவித்த பெற்றோர் இது பற்றி சுசீந்திரம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜபால், சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அஜிதாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் வாலிபர் ஒருவருடன் அவருக்கு காதல் இருந்தது தெரிய வந்தது.
மேலும் அந்த வாலிபரும், அஜிதாவும் சந்தோஷமாக இருந்த தகவலும் கிடைத்தது. இவ்வாறு அன்பாக பழகிய அந்த வாலிபர் சமீப நாட்களாக அஜிதாவை உதாசீனப்படுத்தியாத தெரிகிறது.
இதனால் மனம் உடைத்த அவர் தற்கெ்ாலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அஜிதாவை ஏமாற்றிய அந்த வாலிபர் யார் என்று விசாரணையில் இறங்கியுள்ளனர்.