திமுக எம்எல்ஏக்கள் கடும் ரகளை... சட்டசபை 3 மணிவரை ஒத்திவைப்பு
சிறப்பு சட்டசபைக்கூட்டம் பெரும் அமளியுடன் தொடங்கியது, ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஓபிஎஸ் அணி, திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தொடர் அமளியில் ஈடுபட்டனர். சட்டசபை 3 மணிவரை ஒத்த
சென்னை: பரபரப்பான சூழ்நிலையில் சிறப்பு சட்டசபைக்கூட்டம் இன்று காலை கூடியது. சபை கூடியதற்கான காரணம் பற்றி சபாநாயகர் விளக்கம் அளித்தார். தொடர்ந்து முதலில் யார் பேசுவது என்பதில் அமளியும் குழப்பமும் ஏற்பட்டது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் அணி, திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். சட்டசபையை ஒத்திவைத்து சபாநாயகர் வெளியேறினார். அவை மீண்டும் கூடிய உடன் திமுக எம்எல்ஏக்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டசபையில் கிட்டதட்ட 28 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை சட்டசபையில் நிரூபிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
சட்டசபை இன்று கூடிய உடன் சபாநாயகர் தனபால் சபை கூடியதற்கான காரணத்தை விளக்கினார். இதனைத் தொடர்ந்து முதலில் யார் பேசுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. செம்மலை பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் கோரினர்.
பெரும் அமளிக்கு இடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானித்தை முன்மொழிந்தார். சட்டசபையின் கதவுகள் மூடப்பட்டன. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுகவும், ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்களும் முழக்கமிட்டனர்.
#WATCH DMK MLAs scuffle with TN Assembly speaker, protesting DMK MLA Ku Ka Selvam sat on speaker chair #floortest (Jaya TV) pic.twitter.com/CkMQY9FfQx
— ANI (@ANI_news) February 18, 2017
ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு ஓபிஎஸ் அணியின் கொறடா செம்மலை கோரிக்கை வைத்தார். அவர்களுக்கு ஆதரவாக திமுகவினர் முழக்கமிட்டனர். உறுப்பினர்கள் அமைதிகாக்குமாறு சபாநாயகர் தனபால் கோரிக்கை வைத்தார்.
எனினும் ஓ. பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களும், ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களும் முழக்கமிட்டனர். வேண்டும் வேண்டும் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று முழக்கமிட்டவாறே சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். சில எம்எல்ஏக்கள் இருக்கை மீது ஏறி நின்று முழக்கமிட்டனர்.
சட்டசபை இருக்கைகளை தட்டி எதிர்கட்சியினர் கடுமையாக ரகறை செய்தனர். இதனயைடுத்து சட்டசபையில் இருந்து சபாநாயகர் வெளியேறினார். எதிர்கட்சியினர், ஓபிஎஸ் அணியினரின் ரகளையால் சட்டசபை கடும் அமளிதுமளியானது.
சபாநாயகர் மைக் உடைக்கப்பட்டது. சட்டசபை ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் கூடிய உடன், தன்னை திமுக எம்எல்ஏக்கள் அவமானப்படுத்திவிட்டதாக சபாநாயகர் கூறி வேதனைப்பட்டார். திமுக எம்எல்ஏக்கள் தொடர் அமளியில் ஈடுபடவே, அவைக்கு குந்தகம் விளைவித்த காரணத்தால் வெளியேற்ற உத்தரவிடுவதாக கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.