சென்னை: சேலம் அங்கம்மாள் காலனி நிலப் பறிப்பு விவகாரத்தில் சிக்கியுள்ள பின்னணியில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் விவசாயத்துறை, போக்குவரத்து அமைச்சர் கே.என். நேருவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சேலம் அங்கம்மாள் காலனியில் ஏழைகளின் நிலத்தைப் பறித்ததாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது சர்ச்சை உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக சேலம் கூடுதல் உதவி நீதிபதி அமுதா மற்றும் அரசு வக்கீல் மூர்த்தி ஆகியோர் அமைச்சரின் சார்பில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள வக்கீல் ஹரிபாபுவிடம் சமரசம் பேசியது தொடர்பான வீடியோ டேப்பை டெஹல்கா.காம் இணையதளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முதல்வர் கருணாநிதி நேற்று முன்தினம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்தப் பின்னணியில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வசம் இருந்த விவசாயத்துறை, போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது பதவிப் பறிப்புக்கான முதல் படியாக அல்லது அவரது உடல் நலக் குறைவால் முதல்வர் எடுத்த நடவடிக்கையா என்று தெரியவில்லை.