"என்னை விட என் டிரைவர் அதிக வரி கட்டுகிறார்.." ஆனந்த் சீனிவாசன் போடும் புது கணக்கு.. அது எப்படி?
சென்னை: பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் சேமிப்பு, வரி என அனைத்து விஷயங்கள் குறித்தும் எளிதாக விளக்குவார். இதற்கிடையே அவர் சமீபத்தில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில், எப்படி தனது டிரைவரை விட குறைவாக வரி கட்டுகிறார் என்பதை அவர் விளக்கியுள்ளார். இந்தியாவின் வரிகள் கட்டமைப்பை விளக்கிய அவர், லோன் வாங்குவது தொடர்பாகவும் சில கருத்துகளைக் கூறியிருந்தார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டின் போது வருமான வரி தொடர்பான அறிவிப்பே பொதுமக்களின் கவனம் பெறும். வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதா என்பதையே மிடில் கிளாஸ் மக்கள் அனைவரும் பார்ப்பார்கள். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன், வரிகள் தொடர்பாக சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில், "நான் பெரு நிறுவனங்களின் கடன்களைப் பற்றிப் பேசவில்லை. ஆனால், தனிப்பட்ட நபரின் லோன் என்பது நீங்கள் உங்களையே அடிமைத்தனத்திற்குள் விற்றுக் கொள்கிறீர்கள் என அர்த்தம். உங்களை எவ்வளவு தூரம் விற்க விரும்புகிறீர்கள் என்பது நீங்கள் எடுக்கும் முடிவு. (அதாவது எவ்வளவு லோன் வாங்குகிறீர்கள் என்பது).. நம்மில் பெரும்பாலானோர் லோன் வாங்குவதன் மூலம் நம்மை நாமே விற்றுக் கொள்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்காமலேயே கடன்களை வாங்குகிறோம்.
வரிகள்
நம்மில் பெரும்பாலானோர் நேரடி வரிகள் (Direct Taxes) பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் இப்போது ஆண்டுக்கு 12 லட்சம் வரை வரி இல்லை. நீங்கள் சுயதொழில் செய்பவராக இருந்தால், ஆண்டுக்கு 30 அல்லது 40 லட்சம் வரை கூட வரி கட்டத் தேவையில்லை. ஆனால் இங்கு தான் பிரச்சனை இருக்கிறது.. நம்மில் யாரும் வருமான வரி கட்ட விரும்புவதில்லை.
டிரைவர் அதிக வரி
ஆனால், உண்மையில் இது தவறு.. பணக்காரர்கள் வரி கட்டியாக வேண்டும், ஏழைகள் தான் வரி கட்டத் தேவையில்லை.. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் இது தலைகீழாக நடக்கிறது. பணக்காரனான நான் வரி கட்டுவதில்லை அல்லது மிகக் குறைவாகக் கட்டுகிறேன்.. ஆனால் என் டிரைவர் என்னை விட அதிக வரியைக் கட்டுகிறார். அதாவது நான் எனது வருமானத்தில் குறைந்த சதவிகிதத்தையே வரியாகக் கட்டுகிறேன். ஆனால், அவர் தன் வருமானத்தில் என்னை விட அதிக சதவீதத்தை வரியாகச் செலுத்துகிறார்.
ஏனெனில் ஜிஎஸ்டி என்பது இருவருக்கும் ஒன்றுதான். அவர் பெட்ரோல் போட்டாலும் சரி, நான் போட்டாலும் சரி, இருவரும் ஒரே தொகையைத்தான் வரியாகச் செலுத்துகிறோம். என் வருமானத்தில் என் நுகர்வு என்பது வெறும் 5 சதவீதம்கூட இருக்காது. ஆனால் அவர் வருமானத்தில் நுகர்வு என்பது 100 சதவீதத்தையும் தாண்டி இருக்கும். எனவே, அவர் என்னை விட அதிக வரி செலுத்துகிறார். அதனால் தான் நாம் இந்த நிலையில் இருக்கிறோம்" என்றார்.
என்ன மேட்டர்!
அதாவது வரிகளை பொறுத்தவரை அது இரு வகைப்படும்- நேரடி வரி, மறைமுக வரி! நேரடி வரி என்பது வருமான வரி, சொத்து வரி உள்ளிட்டவை. அடுத்து மறைமுக வரி- இவை ஜிஎஸ்டி, கலால் வரி போன்றவை.. அதாவது பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகள். ஒரு கோடி சம்பாதிப்பவருக்கு 1000 ரூபாய் வரி என்பது ஒரு துளி. ஆனால் 10,000 சம்பாதிப்பவருக்கு அந்த 1000 ரூபாய் என்பது மிகப்பெரிய சுமை. ஏழைகள் தங்கள் வருமானத்தில் 100 சதவீதத்தையும் செலவு செய்வதால், அவர்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் மறைமுக வரியைச் செலுத்தி பணக்காரர்களை விட அதிக சதவீத வரியைச் சுமக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications