தங்கத்திற்கு டிமானிடைசேஷன்? மக்களிடம் குண்டுமணி தங்கம் கூட மிஞ்சாதா? ஆனந்த் சீனிவாசன் விளக்கம்
சென்னை: இந்த காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கத்திலேயே அதிகம் முதலீடு செய்கிறார்கள். இதற்கிடையே மக்களிடம் இருக்கும் தங்கத்தை எல்லாம் அரசு வாங்கிக் கொள்ளும் திட்டம் குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பரவியது. இது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாகப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவில் காலம் காலமாகவே தங்கமே பிரதான முதலீடாக இருந்துள்ளது. ஆத்திர அவசரத்தில் தங்கம் கை கொடுக்கும் என்பதால் பொதுமக்கள் எப்போதும் தங்கத்தைத் தனது சேமிப்பாக வைப்பார்கள். பணம் வரும்போது அதைச் சேமித்து தங்கம் வாங்குவதும், எதாவது சிக்கல் என்றால் வங்கியில் அதை வைத்து பணம் வாங்குவதுமே பழக்கமாக இருந்துள்ளது.

ஆனந்த் சீனிவாசன்
அதேநேரம் தங்கம் என்பது இந்தியாவில் பெரியளவில் கிடைப்பதில்லை. இதனால் நாம் பெருமளவு தங்கத்தை இறக்குமதியே செய்கிறோம். இப்படி இறக்குமதி செய்யப்படுவதால் அந்நிய செலாவணி பாதிக்கப்படுகிறது. மேலும், தங்கம் சேமிப்பாகப் போய்விடுவதால் பொருளாதாரத்திலும் அதன் பங்களிப்பு இருப்பதில்லை. இதற்கிடையே வீடுகளில் இதுபோல இருக்கும் தங்கத்தை அரசு வாங்க வேண்டும் என்பது போல ஒரு திட்டத்தை நிலேஷ் ஷா என்பவர் முன்மொழிந்துள்ளார். அது பெரிய விவாதமாக வெடித்துள்ளது. இது ஆனந்த் சீனிவாசன் விரிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "இந்த ஆர்டிகிளை நிலேஷ் ஷா என்பவர் எழுதி இருக்கிறார். இவர் பிரபல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் வேலை செய்கிறார். மேலும், பிரதமர் மோடியின் எகனாமிக் கவுன்சிலில் அட்வைசராக இருக்கிறது. இந்த திட்டம் தனது பர்சனல் கருத்து எனச் சொன்னாலும் கூட இதையும் நாம் கவனிக்க வேண்டும். அவர் ரெண்டு, மூணு பொடி வைத்துப் பேசி இருக்கிறார்.
பொருளாதாரம்
கடந்த 10 ஆண்டுகளாக இந்த அரசால் பொருளாதாரத்தை நடத்த முடியவில்லை.. முன்பு இதே பாஜக அரசில் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியம் கூட நாட்டின் பொருளாதார வளர்ச்சி இவர்கள் சொல்வதைப் போல 8% எல்லாம் இல்லை.. 3% தான் எனச் சொல்லிவிட்டார். அவர் மட்டுமின்றி பல்வேறு வல்லுநர்களும் பொருளாதார வளர்ச்சி 8% இல்லை என்றே சொல்லியுள்ளனர். இந்தியாவின் இரு பெரிய ஸ்டாட்டிஸ்டிசியன்ஸ்கள் கூட 8% வளர்ச்சி சந்தேகத்தைக் கிளப்பியுள்ளனர்.
இப்படிப் பொருளாதாரம் சிக்கலில் இருக்கிறது. இந்தச் சூழலில் இதுபோல யாரோ ஒருவர் கொடுக்கும் ஐடியாவை கேட்டு, மக்களிடம் தங்கத்தை வாங்கிவிடுவார்களோ என்று பலரும் யோசிக்கிறார்கள். இந்த அரசு டிமானிடைசேஷன் கூட இப்படித் தான் செய்தார்கள். ரகுராம் ராஜன், உர்ஜித் பட்டேல் எனப் பலர் சொல்லியும் கேட்காமல் பிரதமர் டிமானிடைசேஷனை செய்தார். அதேபோல அனைத்து வல்லுநர்கள் சொல்லியும் கேட்காமல் ரிசர்வ் வங்கியின் எமர்ஜென்சி பணத்தையும் எடுத்து செலவு செய்தனர். எனவே, 3வது முறையும் இதுபோல எதுவும் நடக்க முடியாது எனச் சொல்ல முடியாது.
முழு பூசணிக்காய்
முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலத் தங்க விவகாரத்தில் கூறியுள்ளனர். அதாவது அரசு இதுபோன்ற ஒரு திட்டத்தை அறிவிக்குமாம். அதில் மக்கள் தங்கத்தைக் கொடுத்துவிடுவார்களாம். ஏற்கனவே, இதுபோல பல திட்டங்களை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. ஆனால், யாருமே போய் தங்கத்தைக் கொடுத்ததே இல்லை. ஆனால், இவர் 35000 டன் தங்கமும் வந்துவிட்டால் என்ன எனப் பேசுகிறார். அதாவது அரசு 35000 டன் தங்கத்தைப் பிடுங்கிவிடும்.. அடுத்து என்ன செய்யலாம் என்ற கணக்கை விளக்குகிறார்.
யாரும் தர மாட்டார்கள்
எனக்கு தெரிஞ்சு இதுபோன்ற திட்டங்களில் மக்கள் யாருமே தங்கத்தைத் தர மாட்டார்கள். இதுபோல எதாவது சொன்னால் உடனடியாக மக்கள் தங்கத்தைப் பதுக்க ஆரம்பித்துவிடுவார்கள். வங்கியில் சரியான வட்டியைக் கொடுத்தால் யாரும் தங்கத்தை வாங்க மாட்டார்கள். வங்கியில் குறைவான வட்டி தருவதாலேயே தங்கத்தை வாங்குகிறார்கள். அப்படி இருக்கும்போது இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது சரியாக இருக்காது. இதனால் பாதிப்பு என்றால் முடிந்தால் தங்க இறக்குமதிக்குத் தடை விதிக்கட்டும். அது முடியாது.. பொதுமக்களைப் பாதிக்கும்படி இப்படி எல்லாம் செய்யக்கூடாது" என்றார்.
இந்தத் திட்டம் என்பது பிரதமர் மோடியின் எகனாமிக் கவுன்சிலில் அட்வைசராக இருக்கும் நிலேஷ் ஷா என்பவர் முன்மொழிந்து இருந்தாலும் இது தனது தனிப்பட்ட கருத்து என்பதை அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். மேலும், அரசும் கூட இது தொடர்பாக எந்தவொரு திட்டமும் இருப்பதாகக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications