ஈரான் போர்: இந்தியா எடுத்த முடிவு.. கையைவிட்டு போகிறதா சபாஹார் துறைமுகம்!
இந்தியாவுக்கு மத்திய ஆசியா நுழைவாயிலாகக் கருதப்பட்ட முக்கியமான சபாஹார் துறைமுகத் திட்டம் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க பொருளாதாரத் தடைகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய அரசு கடினமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியா சபாஹார் துறைமுகத் திட்டத்தில் தனது பங்கை ஒரு ஈரானிய நிறுவனத்துக்கு விற்பனை செய்ய தயாராகி வருகிறது. அமெரிக்க வர்த்தக தடைகள் தொடர்பான விலக்கு நீட்டிப்பு உத்தரவு காலாவதியாகும் சில நாட்களுக்கு முன்பு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என தெரியவந்துள்ளது.

இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் (ஐபிஜிஎல்) நிறுவனம், இந்தியா போர்ட்ஸ் குளோபல் சபாஹார் ஃப்ரீ சோன் (ஐபிஜிசிஎஃப்ஸ்) நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளை ஈரானிய பங்குதாரருக்கு விற்கும் திட்டம் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இதை ஒரு தற்காலிக ஏற்பாடாகக் கருதப்படுகிறது. தடைகள் முழு வீச்சில் அமலுக்கு வரும்போதும் துறைமுக செயல்பாடுகள் தடையின்றி தொடர்வதே இந்த பங்கு விற்பனையின் நோக்கம்.
இத்தகைய முடிவை எடுக்க முக்கிய நோக்கம் மோதல் இல்லாமல் செயல்பாடுகளைத் தொடர்வதுதான். தடைகள் நீடிக்கும் காலத்தில் ஈரானிய உள்ளூர் நிறுவனம் துறைமுகத்தை நிர்வகிக்கும். போர் சூழல் குறைந்து, தடைகள் தளர்த்தப்பட்டவுடன் கட்டுப்பாடு மீண்டும் இந்தியாவுக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சபாஹார் துறைமுகம் இந்தியாவுக்கு மிக முக்கியமான உள்கட்டமைப்பு சொத்தாகும். இது பாகிஸ்தானைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு நேரடி சரக்கு போக்குவரத்து இணைப்பை வழங்குகிறது. ஆப்கானிஸ்தானுக்கு பலதரப்பட்ட உதவிகளை அனுப்புவதிலும் இந்த துறைமுகம் முக்கிய பங்கு வகித்துள்ளது.
இந்தத் திட்டத்தில் இந்தியா ஏற்கெனவே சுமார் 120 மில்லியன் டாலர் அளவுக்கு உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களுக்கு முதலீடு செய்துள்ளது. இது இந்தியாவின் நீண்டகால வர்த்தக வளர்ச்சி திட்டத்தில் மிக முக்கியமானது.
2018-ம் ஆண்டு இந்தியா சபாஹார் துறைமுகத்தை இயக்கவும், நிர்வாகம் செய்யவும் ஈரான் மீதான அமெரிக்க தடைகளில் இருந்து விலக்கு பெற்றது. ஆனால் கடந்த ஒரு வருட காலத்தில் சூழல் மாறியுள்ளது. 2025 பிப்ரவரியில் அமெரிக்கா ஈரானுக்கு பொருளாதார நிவாரணம் அளிக்கும் விலக்குகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியது. கடந்த செப்டம்பரில் முந்தைய விலக்கு ரத்து செய்யப்பட்டது.

இந்த சவால்களுக்கிடையில் இந்தியா 2024-ம் ஆண்டு ஈரானுடன் 10 ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்திட்டு துறைமுக டெர்மினலை நிர்வகிக்க உறுதி செய்தது. ஆனால் தற்போதைய தடைகள் மற்றும் மோதல்கள் காரணமாக இந்த ஒப்பந்தம் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் இத்தகைய காலக்கட்டத்தில் சபாஹார் துறைமுகத்தை எப்படி நிர்வாகம் செய்வது என்பதில் இந்திய அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. இதேபோல் பங்கு விற்பனை திட்டம் பேச்சுவார்த்தை அளவில் மட்டும் தான் உள்ளது, இறுதியான அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து மட்டுமே வரும். இல்லையெனில் இத்தகைய போர் சூழ்நிலையிலும் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து சபாஹார் துறைமுகத்தை இயக்க விலக்கு பெறுமா என்பதும் முக்கிய கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications