தங்கத்தை விட வேகமாக உயரும் எலுமிச்சை விலை சதவீதம்.. ரூ.2க்கு விற்ற எலுமிச்சை இப்போ எவ்வளவு தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில், இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதோடு தமிழ்நாட்டின் முக்கிய கோடைக்கால சுற்றுலா தலங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி ஆகிய பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனால் மக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் தடுமாறி வருகின்றனர்.
வருடம் முழுவதும் ஜிலு ஜிலுவென இருக்கும் பெங்களூரிலும் அதிகப்படியான வெயில், ஏற்கனவே இருக்கும் டிராபிக் பிரச்சனைக்கு மத்தியில் இந்த வெயிலின் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலர் டீஹைட்ரேஷன் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இந்த வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் பலவழிகளை கையைாண்டாலும், பெரும்பாலான மக்களுக்கு எளிதாக கிடைக்கும் ஒரு விஷயம் எலுமிச்சை ஜூஸ்.
உடல் வெப்பத்தை குறைக்க தர்பூசணி, இளநீர் போன்றவற்றுடன் எலுமிச்சைச் ஜூஸ் மக்கள் அதிக அளவில் அருந்தி வருகின்றனர். வீடுகள், கடைகள் மற்றும் தெரு உணவு நிலையங்களில் எலுமிச்சைச் ஜூஸ்-க்கான தேவை பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனால் சந்தையில் எலுமிச்சைக்கான டிமாண்ட் எதிர்பாராத வகையில் இந்த வருடம் உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் கோடைக்காலத்தில் எலுமிச்சை பழத்திற்கான டிமாண்ட் உயரும் ஆனால் இந்த ஆண்டு சித்திரை மாதம் தொடங்கும் முன்பே கடும் வெப்பம் நிலவுவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதானால் டிமாண்ட் முன்கூட்டியே அதிகரித்துள்ளது.
ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் ஒரு எலுமிச்சை ரூ.2க்கு கிடைத்த நிலையில், தற்போது அதன் அளவைப் பொறுத்து ரீடைல் விலை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்கப்படுகிறது. பெரிய பழங்கள் ரூ.15 முதல் ரூ.20 வரை செல்லுகின்றன. மொத்த விற்பனையில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.250 வரை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் கிலோவுக்கு 40 ரூபாய் உயர்ந்கு எலுமிச்சை ரூ.220க்கு விற்கப்பட்டது.
ஆபரண தங்கம் விலை சென்னையில் ஒரு கிராம் 14,230 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் இன்று 30 ரூபாய் மட்டுமே உயர்ந்துள்ளது. இது அதன் விலையில் 0.211% மட்டுமே. ஆனால் எலுமிச்சை பழம் சுமார் 22 சதவீதம் நேற்றைய 40 ரூபாய் விலை உயர்வு மூலம் பதிவு செய்துள்ளது.
இதுக்குறித்து எலுமிச்சை வியாபாரி கூறுகையில், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எலுமிச்சையை மொத்தமாக கொண்டு வருகிறோம். கடந்த மாதங்களில் விற்பனை மந்தமாக இருந்தது. ஆனால் தற்போது வெயிலின் காரணமாக மக்கள் அதிக அளவில் வாங்குகின்றனர். விலை உயர்ந்தாலும் விற்பனை அதிகரித்துள்ளது என கூறினார்.
விலை உயர்வு இருந்தபோதிலும், செயற்கை குளிர்பானங்களைத் தவிர்த்து இயற்கையான எலுமிச்சைச் சாற்றை மக்கள் விரும்பி வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது. உடல்நலத்தை கருத்தில் கொண்ட இந்த மாற்றம் சந்தையில் தெளிவாகத் தெரிகிறது. எலுமிச்சை விலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்க இதே நிலை தான்.
ஆந்திராவிலும் எலுமிச்சை விலை உயர்வு
இதேபோன்ற நிலை ஆந்திரப் பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்ததால் அங்குள்ள போடலகூர் எலுமிச்சை சந்தையில் 80 கிலோ பை ஒன்று ரூ.10,000க்கு விற்கப்பட்டது. இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும். தென்னிந்தியாவில் முழுவதும் எலுமிச்சை விலை உயர்வு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம் மற்றும் பழங்கள் விலை உயர்வு பொதுமக்களின் அன்றாட செலவுகளை அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகள் மற்றும் சந்தை வியாபாரிகள் இந்த சூழ்நிலையில் கூடுதல் வருமானத்தை பார்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications