ஒரே நாளில் 40% சரிந்த டாடா நிறுவன பங்குகள்.. பதறிய முதலீட்டாளர்கள்.. யாருக்கு எவ்வளவு நஷ்டம்?
சென்னை: நேற்று ஒரே நாளில் டாடா மோட்டார்ஸ் பங்குகள் திடீரென 40% வரை சரிந்தது. இதனால் அதில் முதலீடு செய்திருந்த பலரும் கலக்கமடைந்தனர். ஆனால், இதில் முதலீட்டாளர்கள் யாருக்கும் நஷ்டம் இல்லை என்று டாடா மோட்டார்ஸ் விளக்கமளித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் இந்தளவுக்குச் சரிய என்ன காரணம்.. இவ்வளவு விலை குறைந்த பிறகும் நஷ்டம் இல்லை என்று டாடா மோட்டார்ஸ் சொல்ல என்ன காரணம் என்பதை நாம் விளக்கமாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள முக்கிய ஆடோமொபைல் நிறுவனங்களில் ஒன்று டாடா மோட்டார்ஸ்.. டிரக், லாரி போன்ற வணிக வாகன பிரிவில் கடந்த பல ஆண்டுகளாகவே டாடா மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மேலும், கார் பிரிவிலும் கடந்த சில ஆண்டுகளாக டாடா நிறுவனம் மெல்ல வளர்ந்து வருகிறது.

40% சரிவு
இந்தச் சூழலில் தான் டாடா மோட்டார்ஸ் பங்குகள் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் திடீரென சுமார் 40 சதவீதம் சரிந்தன. திங்கள் மாலை ரூ.660.90ஆக இருந்த அதன் விலை, நேற்று திடீரென ரூ.399க்கு சரிந்தது. அதாவது ஒரே நாளில் 40% சரிந்துள்ளது. இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.45 லட்சமானது. இதனால் டாடா மோட்டார்ஸில் முதலீடு செய்தவர்களில் சிலர் கலக்கமடைந்தனர்.
காரணம் என்ன
ஆனால், இதனால் யாருக்கும் எந்தவொரு நஷ்டமும் இல்லை என்றும் இதனால் பயப்படத் தேவையில்லை என்கிறார்கள் வல்லுநர்கள்.. அதாவது இதுவரை டாடா மோட்டார்ஸ் ஒரே நிறுவனமாக இயங்கி வந்தது. ஆனால், இப்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வணிக வாகனங்களுக்குத் தனி நிறுவனம், கார் உள்ளிட்ட பாசஞ்சர் வாகனங்களுக்குத் தனி நிறுவனம் என இரண்டாகப் பிரிகிறது. அதற்கேற்ப அட்ஜட்ஸ்மெண்ட் செய்யவே விலை சரி குறைக்கப்பட்டுள்ளது என்பதால் முதலீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
என்ன நடக்கும்
டாடா மோட்டார்ஸ் டீமெர்ஜர் திட்டத்தின்படி, அக்டோபர் 14ஆம் தேதி டாடா மோட்டார்ஸ் பங்குகளை வைத்திருந்தவர்களுக்கு, ஒவ்வொரு டாடா மோட்டார்ஸ் பங்குக்கும் ஒரு டாடா மோட்டார்ஸ் கமர்ஷியல் வெஹிகல்ஸ் லிமிடெட் (TMLCV) பங்கு இலவசமாகவே கிடைக்கும். அதாவது உங்களிடம் நேற்று 10 டாடா மோட்டார்ஸ் பங்குகள் இருந்தது என்றால் உங்களுக்கு 10 டாடா மோட்டார்ஸ் கமர்ஷியல் வெஹிகல்ஸ் பங்குகள் கிடைக்கும். இதுபோல இரு நிறுவனங்களாகப் பிரிந்ததாலேயே விலை குறைந்துள்ளது. இதனால் முதலீட்டாளருக்கு எந்தவொரு இழப்பும் இல்லை..
நேற்று அக்டோபர் 14ம் தேதி தான் "ரெக்கார்டு தேதி" நிர்ணயிக்கப்பட்டு இருந்து. இந்த தேதியில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு மட்டுமே, அவர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு டாடா மோட்டார்ஸ் (TML) பங்குக்கும், டாடா மோட்டார்ஸ் கமர்ஷியல் வெஹிகல்ஸ் லிமிடெட் (TMLCV) நிறுவனத்தின் ஒரு பங்கு வழங்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் பிறகு டாடா மோட்டார்ஸ் வாங்குவோருக்குக் கூடுதல் பங்குகள் கிடைக்காது.
எப்போது நடக்கும்
முன்பே குறிப்பிட்டது போல டாடா மோட்டார்ஸ் இரு நிறுவனங்களாகப் பிரிக்கப்படும். அதில் டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர் வாகனங்களின் கீழ் டாடாவின் கார்கள், மின்சார வாகனங்கள் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகியவை செல்லும். மறுபுறம் டாடா மோட்டார்ஸ் கமர்ஷியல் வெஹிகல்ஸ் லிமிடெட் (TMLCV) கீழ் லாரி, டிரிக்குகள் செல்லும். இரண்டு பிரிவுகளிலும் தனித்தனியாகக் கவனம் செலுத்தவே இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் டாடா கமர்ஷியல் பங்குகள் எப்போது வரவு வைக்கப்படும் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. அவை ஒழுங்குமுறை ஆணையங்களின் ஒப்புதல்களுக்குக் காத்திருக்க வேண்டும். இதற்கு பொதுவாக 45-60 நாட்கள் ஆகும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications