டிசிஎஸ் சிஇஓ கிருத்திவாசன் சம்பளம் ரூ.26.5 கோடி! மற்ற டெக் CEOக்கள் ஊதியம் என்ன தெரியுமா?
மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ கிருத்திவாசன் ஆண்டுக்கு ரூ.26.52 ஆண்டு சம்பளத்தை பெறுகிறார். அவரது சம்பளத்தில் பெரும்பகுதி அதாவது சுமார் 23 கோடி ரூபாய் கமிஷனாக மட்டுமே வழங்கப்படுகிறது. இது அதிகம் போலத் தெரிந்தாலும், மற்ற டெக் நிறுவன சிஇஓ-க்களை விட இவரது சம்பளம் குறைவாகவே இருக்கிறது.
உலகிற்கே ஐடி நிறுவனங்களின் தலைநகராக இந்தியா இருக்கிறது. உலகின் பல டாப் ஐடி நிறுவனங்கள் இந்தியாவில் அமைந்துள்ளன. அப்படி இந்தியாவில் உள்ள டாப் ஐடி நிறுவனமாக டிசிஎஸ் இருக்கிறது. டாடா குழுமத்தில் முக்கியமான நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் கோடியை டாடா குழுமத்திற்குச் சம்பாதித்துக் கொடுக்கிறது.

டிசிஎஸ் சிஇஓ சம்பளம்
டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆக கே.கிருத்திவாசன் இருக்கிறார். கடந்த 2023ம் ஆண்டு முதலே டிசிஎஸ் நிறுவனத்தை இவர் தான் வழிநடத்தி வருகிறார். இதற்கிடையே இந்த நிதியாண்டில் அவர் பெற்ற ஊதியம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் மட்டும் டிசிஎஸ் சிஇஓ கிருத்திவாசன் ரூ.26.52 கோடி ஊதியம் பெற்றுள்ளார். முந்தைய ஆண்டில் ரூ.25.35 கோடி மட்டுமே ஊதியமாகப் பெற்ற நிலையில், இந்தாண்டு அதைவிட 4.6 சதவீதம் அதிக ஊதியத்தை அவர் பெற்றிருப்பதாக டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கமிஷன் தான் அதிகம்
அவரது மொத்த ஊதியத்தில் ரூ.1.39 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டில் ரூ.1.27 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தவிர மேலும் ரூ.2.12 கோடி மதிப்புள்ள இதர, அலவுன்ஸ்களும் அவரது மொத்த ஊதியத்தில் இருக்கிறது. இது தவிர அவரது ஊதியத்தில் பெரும்பகுதி, அதாவது ரூ.23 கோடி கமிஷனாக மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சராசரி டிசிஎஸ் ஊழியருடன் ஒப்பிடுகையில் 329.8% ஆக இவரது சம்பளம் இருக்கிறது.
மற்ற டெக் நிறுவன சிஇஓ-க்கள்
இது அதிகம் போலத் தெரிந்தாலும் உண்மையில் மற்ற டாப் நிறுவனங்களின் சிஇஓ-க்கள் பெரும் சம்பளத்தை விட இது குறைவாகும். உதாரணமாக எச்.சி.எல் டெக்னாலஜிஸ் சிஇஓ சி விஜயகுமார் ரூ.84.16 கோடி சம்பளம் பெறுகிறார். அதேபோல தியரி டெலாபோர்ட் (விப்ரோ) ரூ.82 கோடி, சலீல் பரேக் (இன்ஃபோசிஸ்) ரூ.66.25 கோடி ஆண்டு வருமானம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
இதர டிசிஎஸ் ஊழியர்கள்
கிருத்திவாசனுக்கு இந்தாண்டு 4.5% ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், அது கிட்டத்தட்ட மற்ற டிசிஎஸ் ஊழியர்களுக்குக் கடந்தாண்டு வழங்கப்பட்ட சராசரி ஊதிய உயர்வுடன் ஒத்தே போகிறது. கடந்தாண்டு இந்தியாவில் டிசிஎஸ் ஊழியர்களுக்கு 4.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. மிகச் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் இரட்டை இலக்கில் ஊதிய உயர்வு கிடைத்தது. பதவி உயர்வுகள் பெற்றோருக்கு 5.5 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரையில் ஊதிய உயர்வு கிடைத்தது. இந்தியாவுக்கு வெளியே உள்ள ஊழியர்களுக்கு 1.5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை சம்பள உயர்வுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் மார்க்கெட் சூழல், ஊழியரின் பங்களிப்பு, திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது டிசிஎஸ் நிறுவனத்தில் 6,07,979 பேர் வேலை செய்யும் நிலையில், அவர்களுக்குக் கடந்தாண்டு 6.3% ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஏஐ துறை
முன்னதாக பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், மேக்ரோ பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் சூழல் மிகவும் சவாலானதாக இருப்பதாகக் கிருத்திவாசன் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஏஐ துறை வேகமாக வளர்ந்து வருவதைக் குறிப்பிட்ட கிருத்திவாசன், பல்வேறு நிறுவனங்களுக்கும் டிசிஎஸ் நிறுவனம் ஏஐ துறையிலும் உதவி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications