சோழர் கால செப்பேடுகள்.. இந்தியாவிடம் ஒப்படைத்த நெதர்லாந்து! பிரதமர் மோடி விசிட்டின் போது சர்ப்ரைஸ்
சென்னை: சோழர் காலத்து 'ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்களை' பல ஆண்டு கால தூதரக முயற்சிகளுக்கு பிறகு நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்புப் பட்டயங்களை நெதர்லாந்து சென்ற பிரதமர் மோடிக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக ஒப்படைத்தது.
'லெய்டன் பிளேட்டுகள்' என அறியப்படும் இந்த சோழர் கால செப்புப் பட்டயங்கள், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக லெய்டன் பல்கலைக்கழகத்தில் இருந்தன. இந்தியா, டச்சு அரசு, மற்றும் லெய்டன் பல்கலைக்கழகம் இடையேயான பல ஆண்டுகால ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குப் பின்பே இதனை நெதர்லாந்து அரசு இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

தமிழ் பாரம்பரிய சான்று
நெதர்லாந்தில் 'லெய்டன் பிளேட்டுகள்' என அழைக்கப்படும் இவை, முதலாம் இராஜராஜ சோழனின் (கிபி 985 - 1014) ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை. இந்தியாவிற்கு வெளியே பாதுகாக்கப்படும் மிக முக்கியமான தமிழ் பாரம்பரியச் சான்றுகளாக இவை போற்றப்படுகின்றன. இந்தப் பட்டயங்கள், நாகப்பட்டினத்தில் உள்ள சூடாமணி விகாரை என்ற பௌத்த மடாலயத்திற்கு அளிக்கப்பட்ட நில வருவாய் மற்றும் வரிகள் குறித்த மானியங்களை ஆவணப்படுத்துகின்றன. இந்தோனேசியாவின் ஸ்ரீவிஜய ராஜ்யத்தின் ஆட்சியாளரான ஸ்ரீ மார விஜயோத்தங்க வர்மன் இந்த மடாலயத்தை நிறுவினார்.

சோழர் ஆட்சியின் உச்சத்தில், தென்னிந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கிடையே நிலவிய கடல்வழித் தொடர்புகள், மத நல்லிணக்கம், கலாச்சாரப் பரிமாற்றங்கள் குறித்து இந்தப் பட்டயங்கள் தெளிவான தகவல்களை வழங்குகின்றன என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்து மன்னர்கள் பௌத்த நிறுவனங்களை ஆதரித்தது, மத சகவாழ்வின் இந்திய மரபை இவை வலியுறுத்துகின்றன.
சோழ அரச முத்திரை
இக்காலகட்டத்தில் இந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசியாவுக்கும் இடையிலான பரந்த கலாச்சாரத் தொடர்புகளை அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். புகழ்பெற்ற பௌத்த அறிஞர் தீபங்கர ஸ்ரீஜனா (அதிசா) இந்தோனேசியாவுக்குப் பயணித்தார். நாளந்தா மகாவிஹாரைக்குச் செல்லும் சீன யாத்ரீகர்கள், இந்தியா செல்லும் வழியில் இந்தோனேசியாவில் தங்கிச் சென்றதும் இதற்குச் சான்று.

இந்த அணைமங்கலம் செப்புப் பட்டயங்கள், அளவிலும் முக்கியத்துவத்திலும் பிரம்மாண்டமானவை. 21 பெரிய மற்றும் மூன்று சிறிய செப்புத் தகடுகளைக் கொண்டுள்ள சுமார் 30 கிலோகிராம் எடையுள்ள இவை, சோழ அரச முத்திரை பொறிக்கப்பட்ட ஒரு வட்டமான செப்பு வளையத்தால் பிணைக்கப்பட்டிருந்தன.
இந்தப் பட்டயங்களுக்கான அசல் மானியத்தை முதலாம் இராஜராஜ சோழன் வழங்கினார். பின்னர், நிரந்தரப் பாதுகாப்பு நோக்கில், அவரது மகன் பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழனே நீடித்த செப்புத் தகடுகளில் இதனைப் பொறிக்கச் செய்தார்.
10 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி
வரலாற்று ஆசிரியர்கள் இந்தச் செப்பேடுகளை வெறும் நிர்வாக ஆவணங்களாகக் கருதவில்லை. மத்தியகால தென்னிந்தியாவின் பன்முகப் பண்பாடு மற்றும் வணிகத் தொடர்புகள் நிறைந்த உலகின் முக்கிய தடயங்களாக இவை திகழ்ந்தன என்று விவரிக்கின்றனர். கி.பி 850 ஆம் ஆண்டு வாக்கில் தஞ்சாவூரை விஜயாலயன் கைப்பற்றிய பிறகு, சோழ வம்சம் முக்கியத்துவம் பெற்றது. தமிழ் நாட்டின் மிகச் செழிப்பான காலங்களில் ஒன்றுக்கு அவர்கள் தலைமை தாங்கினர். பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் போன்ற பிரம்மாண்டமான கோவில்கள் அவர்களின் ஆட்சியில் எழுப்பப்பட்டன.

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோவில், இந்தியாவின் மிகச்சிறந்த கட்டிடக்கலை சாதனைகளில் ஒன்றாகவும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகவும் இன்றும் விளங்குகிறது. சோழர் காலத்தில், நேர்த்தி மற்றும் கலை நுட்பத்திற்காகப் போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற வெண்கலச் சிற்பங்களும் படைக்கப்பட்டன.
எப்படி நெதர்லாந்துக்கு சென்றன
18 ஆம் நூற்றாண்டில், டச்சு காலனித்துவ ஆட்சியின் போது, கோரமண்டல் கடற்கரைப் பகுதியிலிருந்து அணைமங்கலம் செப்புப் பட்டயங்கள் நெதர்லாந்திற்குக் கொண்டுசெல்லப்பட்டன. நாகப்பட்டினம் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, டச்சு அதிகாரி ஃப்ளாரென்டியஸ் கேம்பர், இந்திய கிறிஸ்தவ மதபோதகர் மூலம் இவற்றைக் கைப்பற்றியதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி, 1690 இல் தனது கோரமண்டல் தலைமையகத்தை பழவேற்காடிலிருந்து நாகப்பட்டினத்திற்கு மாற்றியது. அப்போது இந்தப் பட்டயங்கள் ஐரோப்பியரின் கைகளுக்குச் சென்றன. 1862 இல், பேராசிரியர் ஹென்ட்ரிக் ஆரண்ட் ஹாமேக்கரின் சொத்துக்கள் வழியாக இவை லெய்டன் பல்கலைக்கழக சேகரிப்பில் சேர்க்கப்பட்டு அங்கேயே பாதுகாக்கப்பட்டன.
பொன்னியின் செல்வன் புதினம் மூலமாக..
பல பத்தாண்டுகளாக, இந்த அரும்பொருட்கள் பாதுகாப்பான பெட்டகங்களில் வைக்கப்பட்டிருந்தன. அவை பெரும்பாலும் முன்கூட்டிய அனுமதியுடன் ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே அணுகக் கூடியதாக இருந்தன. வரலாற்று ஆசிரியர்கள், தமிழ் கல்வெட்டு ஆய்வாளர்களால் விரிவாக ஆராயப்பட்டு, 'பொன்னியின் செல்வன்' என்ற புகழ்பெற்ற தமிழ் வரலாற்றுப் புதினம் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தன.
இந்த பட்டயங்களைத் திரும்பப் பெறுவதற்கு இந்திய அரசு, டச்சு அரசாங்கம் மற்றும் லெய்டன் பல்கலைக்கழகத்துடன் நீண்டகால இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டது. 2022 இல், காலனித்துவ காலத்துப் பொருட்களைத் திரும்ப ஒப்படைப்பதற்கான ஒரு கொள்கையை நெதர்லாந்து இறுதி செய்த பிறகே, இதில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

சுதந்திர காலனித்துவ சேகரிப்புக் குழுவும் லெய்டன் பல்கலைக்கழக நூலகங்களும் இணைந்து நடத்திய விரிவான தோற்ற ஆராய்ச்சியின் முடிவில், இந்தச் செப்புப் பட்டயங்கள் இந்தியாவிற்குத் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஒருமித்து பரிந்துரைத்தன. ஆணைமங்கலம் செப்புப் பட்டயங்கள் திரும்பப் பெறப்படுவது, இந்தியா-நெதர்லாந்து கலாச்சார ஒத்துழைப்பின் ஒரு மைல்கல்லாகப் போற்றப்படுகிறது. அத்துடன், இந்தியாவின் நாகரிக வரலாற்றின் ஒரு முக்கிய அத்தியாயத்தின் குறியீட்டு மறுசீரமைப்பாகவும் இது பாராட்டப்படுகிறது.
இது மகிழ்ச்சியான தருணம் - பிரதமர் மோடி
பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:- 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்புப்பட்டயங்கள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்படுகின்றன. இதற்கான ஒப்படைப்பு நிகழ்ச்சியில் பிரதமர் ராப் ஜெட்டன் முன்னிலையில் பங்கேற்றேன். இந்த சோழர் செப்புப்பட்டயங்கள் 21 பெரிய தகடுகளும், 3 சிறிய தகடுகளும் கொண்ட தொகுப்பாகும். இதில் பெரும்பாலான உரைகள் உலகின் அழகிய மொழிகளில் ஒன்றான தமிழில் எழுதப்பட்டுள்ளன.
A joyous moment for every Indian!
— Narendra Modi (@narendramodi) May 16, 2026
Chola Copper Plates dating back to the 11th Century will be repatriated to India from the Netherlands. Took part in the ceremony for the same in the presence of Prime Minister Rob Jetten.
The Chola Copper Plates are a set of 21 large plates… pic.twitter.com/Zwu0QFc2ZJ
மாமன்னர் ராஜராஜ சோழன் வழங்கிய வாய்மொழி உறுதியை அவரது மகன் ராஜேந்திர சோழன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், சோழர்களின் பெருமை மற்றும் கடல்சார் வல்லமையையும் இவை வெளிப்படுத்துகின்றன. சோழர்கள், அவர்களின் கலாசாரம் மற்றும் கடல்சார் திறமைகள் குறித்து இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்கிறோம்.
இந்த செப்புப்பட்டயங்களை 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும், நெதர்லாந்து அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications