இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி!
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா இன்று இரவு மிக முக்கியமான முடிவு எடுக்கப் போகிறது. தங்க மார்கெட்டின் எதிர்காலத்தை அதுவே தீர்மானிப்பதாக இருக்கும். தங்கம் விலைக்கும் அதற்கும் என்ன தொடர்பு.. அமெரிக்கா எடுக்கும் முடிவு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
நமது ரிசர்வ் வங்கி எப்படிக் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கிறதோ.. அதேபோல அமெரிக்காவின் பெடரல் வங்கியும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கும். பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டே அமெரிக்க பெடரல் ரிசர்வ் தேவையான முடிவை எடுக்கும்.

வட்டி விகிதம்
இந்த பெடரல் ரிசர்வ் கூட்டம் அமெரிக்காவில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. மத்திய கிழக்கு போர் சூழலில், அமெரிக்க பெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டியின் (FOMC) கூட்டம் நடந்துள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு சர்வதேச அளவில் முக்கியமானதாகப் பார்க்கப்படும். . இப்போது அமெரிக்காவில் வட்டி விகிதம் 3.5% to 3.75%ஆக இருக்கிறது. இந்த வட்டி விகிதம் மீது அமெரிக்க பெடரல் வங்கி எடுக்கும் முடிவே தங்கத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இருக்கும்!
எதிர்பார்ப்பு
ஒரு மாதத்திற்கு முன்பு வரை, அமெரிக்க பெடரல் ரிசர்வ் இந்த ஆண்டு குறைந்தபட்சம் மூன்று முறை வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்றும், அவை ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கும் என்றும் வல்லுநர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் மற்றும் அது ஏற்படுத்தும் பணவீக்கம் ஆகியவை வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்புகளை முற்றிலுமாக மாற்றியுள்ளன. இதனால், அமெரிக்க பெடரல் ரிசர்வ் இந்த ஆண்டு முழுவதும் வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அமெரிக்கா- ஈரான் போர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $100ஐ கடந்து நீடித்தால்.. இந்த ஆண்டின் பிற்பகுதியில் வட்டி விகித அதிகரிப்புகூட நிகழலாம் என கருதப்படுகிறது. போர் சூழலும் அதன் தாக்கங்களும் பொருளாதார முடிவுகளில் எந்தளவுக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பதையே இது காட்டுகிறது.
என்ன செய்யும்!
தற்போதைய நிச்சயமற்ற நிலை மற்றும் பொருளாதார சூழலை வைத்துப் பார்க்கும்போது, இன்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கவே வாய்ப்பு அதிகம். பொருளாதார வளர்ச்சியும் நல்ல நிலையில் இல்லாததால் விலைவாசியைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தவும் முடிவு எடுக்க மாட்டார்கள். கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விடப் பலவீனமாக இருந்தது. அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வெறும் 0.7% மட்டுமே வளர்ச்சி கண்டது. இதனால் வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு குறைவு!
இன்று இரவு அமெரிக்க பெடரல் வங்கி எடுக்கும் முடிவைப் பொறுத்தே தங்கம் விலை இருக்கும். ஒருவேளை வட்டியைக் குறைத்தால் தங்கம் விலை எகிறும்.. வட்டியை அதிகரித்தால் தங்கம் விலை குறையும். ஆனால், இந்த இரண்டுமே நடக்க வாய்ப்பு குறைவு. அமெரிக்க பெடரல் வங்கி நிலையாகவே வட்டியை வைத்திருக்கும். அந்த சூழலில் பெடரல் வங்கி கூறும் கருத்துகள் முக்கியமானதாக இருக்கும்.
என்ன நடக்கும்!
அதாவது வட்டி விகித குறைப்பு குறித்து பாசிட்டிவான கருத்தைச் சொன்னால் தங்கம் விலை உயரும். அதேநேரம் வட்டி விகிதம் குறைப்பு வாய்ப்பில்லை என்றோ அல்லது பணவீக்கம் குறித்த கவலைகளை எழுப்பினாலோ தங்கம் விலை சரியும். இதன் காரணமாகவே அமெரிக்கா என்ன மாதிரியான முடிவை எடுக்கும் என்பதை உலக நாடுகள் உற்றுப் பார்க்கிறது.
இன்றைய தினம் அமெரிக்க பெடரல் வங்கி தலைவர் ஜொரோம் பவுல் உள்ளூர் நேரப்படி 2 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்தித்து அமெரிக்க பெடரல் வங்கியின் முடிவை அறிவிப்பார். நாளைய தினம் தங்கம் விலை அதைப் பொறுத்தே எதிரொலிக்கும்.! இதன் காரணமாகவே இது சர்வதேச அளவில் கவனிக்கப்புடம் விஷயமாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications