விஜய் ஆட்டம் ஆரம்பம்.. எடுத்த எடுப்பில் முக்கிய துறைக்கு டார்கெட்.. நினைத்தது நடக்குமா?
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த உடன் பல துறை அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி முக்கியமான விஷயங்களை நோட் செய்து வைத்துக்கொண்டார். இந்த நிலையில் அமைச்சர்களுக்கு எந்த துறை ஒதுக்கப்பட உள்ளது என்பது குறித்த அறிவிப்பு வருவதற்கு முன்பு சரியான ரோட்மேப் அமைத்துக்கொடுக்கும் பணியில் இறங்கியுள்ளார் விஜய்.
சென்னையில் ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

ஆட்டோமொபைல் துறை
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான முக்கிய சந்திப்பில் BMW, TVS, Hudson உள்ளிட்ட பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் CEOs பங்கேற்று, மாநிலத்தில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் மற்றும் தொடர்புடைய விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினர். இந்த ஆலோசனை மூலம் ஆட்டோமொபைல் துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளுக்கு வலு சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சரின் தொடர் ஆலோசனைக் கூட்டங்கள்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து, பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் மட்ட ஆலோசனை கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே இன்றைய ஆட்டோமொபைல் நிறுவனங்களுடனான சந்திப்பும் நடைபெற்றுள்ளது.
இத்தகைய கூட்டங்கள் மூலம் மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களை நேரடியாக விவாதித்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் அவர் செயல்பட்டு வருகிறார்.
மேலும் தவெக தலைவராக விஜய் கொடுத்த வாக்குறுதியில் முக்கியமானது தமிழ்நாட்டின் பொருளாதார மதிப்பை 1.5 டிரில்லியன் டாலராக 2036ஆம் ஆண்டுக்குள் உயர்த்த வேண்டும் என்பது. இதற்கான முதல் படியை இக்கூட்டத்தின் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார் விஜய். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் எடுத்த எடுப்பில் தமிழ்நாட்டின் தொழிற்துறையின் முதுகெலும்பாக இருக்கும் ஆட்டோமொபைல் துறையின் மீது கவனம் செலுத்தியது பாராட்டத்தக்கது.
2 முக்கிய கூட்டம்
கடந்த 2 நாட்களாக முதல்வர் விஜய் நடத்திய தொடர் ஆலோசனைகளின் அங்கமாக நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இரு முக்கிய கூட்டங்கள் நடைபெற்றன. முதலில் தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதி நிலை மற்றும் நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் சாய்குமார் உள்ளிட்ட நிதித்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து, தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் செயல்பாடுகள் குறித்து அந்தத் துறையின் உயர் அதிகாரிகளுடன் தனி ஆலோசனை நடத்தினார். இந்த இரண்டு கூட்டங்களும் மாநிலத்தின் பொருளாதார நிலையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்றன.
ஆட்டோமொபைல் CEO-க்கள் உடனான கூட்டம்
இந்தத் தொடர் ஆலோசனைகளின் உச்சகட்டமாக இன்று மோட்டார் வாகன நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சென்னையில் நடைபெற்ற இந்த உயர் மட்ட கூட்டத்தில் பங்கேற்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்படும் மற்றும் புதிய முதலீடுகளை மேற்கொள்ளும் வாய்ப்புகளை ஆராய்ந்தன.
முதலீடு ஈர்ப்புக்கான விவாதங்கள்
ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மூலம் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் வரவிருக்கும் புதிய திட்டங்கள் குறித்து தெளிவான விவாதத்தை நடத்தினார்.
தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பது, தற்போதைய தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்களின் நிலைப்பாடுகள் என்ன என்பது குறித்தும் உயர் அதிகாரிகளுடன் விரிவாகப் பேசினார்.
இந்தக் கூட்டத்தின் வாயிலாக ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு புதிய முதலீடுகளை மாநிலத்திற்கு கொண்டு வரும் வாய்ப்பு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.













Click it and Unblock the Notifications