உங்க பணத்திற்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கிகள் எவை.. FD போடுபவர்கள் கவனிக்க வேண்டிய 3 விஷயங்கள்!
சென்னை: பங்குச்சந்தை, ப்யூச்சர்ஸ், ஆப்ஷன்ஸ் என ஏகப்பட்ட முதலீடுகள் வந்தாலும் எப்போதும் எவர்கிரீன் டாப்பாக இருப்பது பிக்சட் டெபாசிட்கள் தான். அப்படி தற்போதைய சூழலில் இந்தியாவில் உங்கள் பணத்திற்கு பிக்சட் டெபாசிட்டில் அதிகபட்ச பணத்தைத் தரும் வங்கிகள் எவை என்பது குறித்து நாம் பார்க்கலாம்.!
இந்த காலத்தில் இளைஞர்கள் பலரும் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்கிறார்கள். இருப்பினும், அதன் ஏற்ற இறக்கங்கள் பலருக்கும் அதிர்ச்சியையே ஏற்படுத்தும். எனக்கு லாபம் எல்லாம் ஆஹா ஓஹோனு தேவையில்லை.. சுமாரான லாபம் என்றாலும் போட்ட பணம் பத்திரமா இருக்கணும் என்று நினைப்பவர்களுக்கும் எப்போதும் கை கொடுப்பது பிக்சட் டெபாசிட் (FD) தான்.

சிறு வங்கிகள்
தற்போது வட்டி விகிதங்கள் ஓரளவுக்கு நிலையாக இருந்தாலும், சில குறிப்பிட்ட வங்கிகள் முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் 8 சதவீதத்திற்கும் மேல் வட்டி வாரி வழங்குகின்றன. அப்படி இந்தியாவில் தற்போதைய சூழலில் பிக்சட் டெபாசிட்களுக்கு எந்த வங்கிகள் அதிக வட்டியைக் கொடுக்கின்றன எனப் பார்த்தால் சிறு வங்கிகளே அதில் முதலிடத்தில் உள்ளன. மக்களைக் கவரப் பெரிய வங்கிகளைக் காட்டிலும் இவர்கள் அதிக வட்டியைத் தருகிறார்கள்.
யார் டாப்
இந்த மாத நிலவரப்படி, ஒரு ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டி தருகின்றன என்பதை அலசுவோம். வட்டி விகிதப் போட்டியில் எப்போதும் முன்னணியில் இருப்பவை சிறு வங்கிகள்தான்!
சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: அதிகபட்சமாக ஆண்டுக்கு 8.10% வட்டி தருகிறது.
ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: இவர்களும் சளைக்காமல் 8.00% வட்டி தருகிறார்கள்.
சிவாலிக் மற்றும் ஜனா வங்கிகள்: முறையே 7.80% மற்றும் 7.77% வட்டியைத் தருகின்றன.
ஸ்லைஸ் மற்றும் உத்கர்ஷ்: 7.75% முதல் 7.50% வரை லாபம் ஈட்டித் தருகின்றன.
தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள்
தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை SBM பேங்க் இந்தியா அதிகபட்சமாக 7.85% வட்டி வழங்குகிறது. இதற்கு அடுத்தபடியாக IDFC ஃபர்ஸ்ட் பேங்க் (7.40%), CSB பேங்க் (7.35%) மற்றும் பந்தன் பேங்க் (7.25%) ஆகியவை ஓரளவுக்குச் சிறப்பான வட்டியைத் தருகின்றன. தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது அரசு பொதுத்துறை வங்கிகளில் வட்டி விகிதம் சற்றே குறைவாகவே இருக்கிறது.
பஞ்சாப் & சிந்து வங்கி அதிகபட்சமாக 6.75% வட்டி வழங்குகிறது. பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பிஎன்பி (PNB), கனரா வங்கி ஆகியவை அனைத்தும் 6.60% முதல் 6.65% வரையிலான வட்டி விகிதங்களையே கொண்டுள்ளன. வெளிநாட்டு வங்கிகளான டாய்ச் வங்கி (7.00%) மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் (6.60%) ஆகியவையும் ஓரளவு ஈடுகொடுத்து வருகின்றன.
கவனிக்க வேண்டியவை
அதேநேரம் அதிக வட்டி கிடைக்கிறது என்பதற்காகக் கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்துவிடக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன் இந்த மூன்று விஷயங்களைச் சரிபார்க்கவும்..
வங்கிகள் திவாலானால் டெபாசிட் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ₹5 லட்சம் வரை மட்டுமே பாதுகாப்பு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அவசரத் தேவைக்கு இடையில் பணத்தை எடுத்தால், வங்கிகள் அபராதக் கட்டணம் வசூலிக்கும். அது உங்கள் லாபத்தைக் குறைத்துவிடும்.
சில வங்கிகள் குறிப்பிட்ட நாட்களுக்கு (உதாரணமாக 444 நாட்கள்) மட்டும் அதிக வட்டி தரும். எனவே, அதையும் கவனத்தில் கொள்ளவும்
"வட்டி விகிதத்தைப் பார்த்து மட்டும் மயங்கிடாதீங்க... வங்கியோட நம்பகத்தன்மையையும் சேர்த்துப் பார்த்து முதலீடு செஞ்சாத்தான், உங்க பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..
இது சாதாரண செய்தி மட்டுமே..! இதை நிச்சயம் பொருளாதார ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் முதலீட்டு ஆலோசகரிடம் உரிய ஆலோசனைகளைப் பெற வேண்டும்!












Click it and Unblock the Notifications