குடுமி "இவங்க" கையில் தான்! இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் செய்வது எப்படி! இறுதி முடிவு யாருடையது?
சென்னை: இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு நாளும் செய்தியைப் பார்க்கும்போது இன்று எவ்வளவு உயர்ந்து இருக்குமோ என்ற அச்சத்துடனேயே பார்க்க வேண்டி இருக்கிறது. உண்மையில் இந்தியாவில் தங்கம் விலை எப்படி முடிவு செய்யப்படுகிறது. இதை நிர்ணயம் செய்வது யார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் தங்கம் என்பது கலாச்சார ரீதியாகவும் சரி முதலீட்டு ரீதியாகவும் சரி முக்கியமானதாக இருக்கிறது. ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்களின் பிரதான முதலீடாகவும் தங்கம் இருக்கிறது. அப்படி இருக்கும் தங்கத்தின் விலையை ஒவ்வொரு நாளும் எப்படி முடிவு செய்யப்படுகிறது. இதை நிர்ணயம் செய்வது யார் என்ற கேள்விக்கான பதிலை நாம் பார்க்கலாம்.

பணவீக்கம், நாணய மதிப்பு
முதலில் பணவீக்கம். நமது அன்றாடச் செலவுகளான மளிகைப் பொருட்கள், எரிபொருள், மின்சாரம் உள்ளிட்டவற்றின் விலை உயர்கிறது என்றால் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என அர்த்தம். பணவீக்கம் அதிகரிக்கும்போது, சேமிப்புகளின் மதிப்பும் முதலீடுகளின் ஆதாயம் பாதிக்கப்படும். அதுபோன்ற சூழல்களில் முதலீட்டாளர்கள் தங்கம் பக்கம் திரும்புவார்கள். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை உயரும்.
அடுத்து நாணய மதிப்பு.. தங்கம் மற்றும் அமெரிக்க டாலர் ஒன்றிற்கொன்று எதிரானவை. டாலரின் மதிப்பு உயரும்போது, தங்கத்தின் மதிப்பு குறையும். மாறாக, டாலர் மதிப்பு குறையும்போது, தங்கத்தின் விலை உயரும். அதேபோல ரூபாய் மதிப்பு சரிந்தாலும் தங்கம் விலை உயரும்.
வட்டி விகிதம், சர்வதேச சூழல்
வட்டி விகிதத்திற்கும் தங்கத்திற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும் அமெரிக்க பெடரல் வங்கி எடுக்கும் வட்டி விகிதம் முடிவுகள் மறைமுகமாகத் தங்கத்தைப் பாதிக்கும்.. அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டியை உயர்த்தும்போது, கடன் பத்திரங்கள் மற்றும் டாலர் முதலீடுகள் அதிகரிக்கும். இதனால் தங்க முதலீடு குறைந்து விலை குறையும். அதேநேரம் பெடரல் ரிசர்வ் வட்டியைக் குறைக்கும்போது தங்கம் விலை உயரும்.
அடுத்து முக்கியமானது சர்வதேச சூழல். அதாவது உலகளவில் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீட்டுப் புகலிடமாகப் பார்க்கப்படுகிறது. எனவே, சர்வதேச அளவில் பதற்றம், போர் அல்லது குழப்பம் ஏற்படும்போது தங்கம் விலை உயரும். கடந்த 5 ஆண்டுகளாகவே தங்கம் விலை உயர இதுவே பிரதானக் காரணம். பொருளாதார நிச்சயமற்ற நிலைகளின்போது தங்கத்தின் விலை உயர்வதையும் நாம் பார்க்கலாம்.
இது ரொம்ப முக்கியம்
அடுத்து மார்கெட் மனநிலை மற்றும் பரவி வரும் தகவல்கள் (Market Mood & Speculation).. தங்கம் என இல்லை எந்தவொரு மார்கெட்டாக இருந்தாலும் மார்கெட்டின் மனநிலையை விலையைப் பெருமளவு தீர்மானிக்கிறது. அதாவது அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கப் போகிறது என மார்கெட் நினைத்தாலே தங்கம் விலை உயரும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே மார்கெட் அப்படி நினைத்தால் தங்கம் விலை உயரும். இதுபோல மார்கெட், அதாவது பெரும்பாலான முதலீட்டாளர்கள், என்ன நினைக்கிறது என்பது முக்கியம்!
இந்திய காரணங்கள்
மேலே சொன்ன விஷயங்கள் சர்வதேச காரணங்கள்.. இது தவிர இந்தியாவுக்கும் சில பிரதானக் காரணங்கள் உள்ளன. அதாவது இந்தியா பொதுவாகவே தங்க நகைகளை அதிகம் பயன்படுத்தும் நாடு. இந்திய வீடுகளில் பல நாடுகளை விடவும் கூட அதிகத் தங்கம் இருக்கிறது. இங்குத் திருமணங்கள், பண்டிகைகள் சீசன்களில் மக்கள் தங்கம் வாங்குவார்கள். தங்கம் ஒரு முதலீடு மட்டுமல்லாமல் மத நம்பிக்கை உடனும் பார்க்கப்படுகிறது. எனவே திருமண சீசனின் போது விற்பனை அதிகரித்து விலை உயரும்.
அடுத்து ஜிஎஸ்டி மற்றும் இறக்குமதி வரி.. இதுவும் கூட இந்தியாவுக்கே பிரதானமான ஒன்றாகும். முன்பு நமது நாட்டில் தங்க இறக்குமதி வரி 15%ஆக இருந்தது. 2 வருடத்திற்கு முன்பு தான் அது 6%ஆக குறைக்கப்பட்டது. இருப்பினும் இப்போதும் 6% வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியும் தங்கம் விலையில் சேரும். இதுபோக தனியாக ஜிஎஸ்டி வரி 3% இருக்கும். நகைகள், நாணயங்கள் மற்றும் தங்கக்கட்டிகள் என எது வாங்கினாலும் இது பொருந்தும்.
இது தவிர செய்கூலி.. இந்தியாவில் நகையாக வாங்கும்போது அதைச் செய்வதற்கான கூலியைத் தனியாக வாங்குகிறார்கள். முன்பு சேதாரம் என தனியாக இன்னொன்று இருக்கும். இப்போது பல நகைக்கடைகள் சேதாரத்தை வாங்குவதில்லை. செய்கூலி மட்டும் வாங்குகிறார்கள். இது ஒரு நகையை வடிவமைத்து, செய்வதற்கான ரேட் ஆகும்.
விலையை நிர்ணயம் செய்வது யார்
இப்படி பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டே இறுதியாகத் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும். சர்வதேச தங்க மார்கெட்டாக கருதப்படும் லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் தங்கம் விலையை நிர்ணயம் செய்யும். இந்தியாவைப் பொறுத்தவரை மும்பையில் உள்ள இந்தியன் புல்லியன் அண்ட் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் விலையை நிர்ணயம் செய்யும். சர்வதேச சூழல், அந்நிய செலாவணி, உள்ளூர் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த விலை மாற்றி அமைக்கப்படும். பொதுவாகத் தினசரி ஒரு முறை மட்டுமே மாற்றி அமைப்பார்கள் சில அரிய சூழல்களில் இரு முறை கூட மாற்றி அமைப்பார்கள்.












Click it and Unblock the Notifications