அரசியலை போலவே வானத்திலும் தொற்றி கொண்ட பதற்றம்.. சென்னையில் தரையிறங்க முடியாமல் விமானங்கள் அவதி
சென்னை: சென்னையில் இன்று நிலவும் வானிலை மற்றும் அரசியல் சூழல் என இரண்டுமே பரபரப்பாக இருக்கிறது.. கோட்டையில் அரியணை ஏறத் துடிக்கும் விஜய்யின் அரசு பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், மற்றொரு புறம் திடீரென கொட்டிய கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகள் ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது. இதனால் விமானச் சேவையும் கூட கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடியும் நிலையில், தலைநகர் சென்னை உச்சக்கட்ட பரபரப்பில் இருக்கிறது. தமிழ்நாடு ஆளுநரை விஜய் இதுவரை 3 முறை சந்தித்துவிட்டார். இருப்பினும், மெஜாரிட்டி இல்லை எனச் சொல்லி இதுவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. இதனால் பதற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மாறிய கிளைமேட்
இது ஒரு பக்கம் இருக்க.. சென்னையில் இன்று பிற்பகலில் திடீரென கிளைமேட் மாறியது. கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், சட்டென கிளைமேட் மாறியது. மதியத்திற்கு மேல் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த திடீர் கனமழை காரணமாக மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்களும் தரையிறங்க முடியாமல் விமானங்கள் தவித்து வருகின்றன.
விமானங்கள்
முக்கிய நகரங்களில் இருந்து வந்த 5 விமானங்கள் கனமழையால் தரையிறங்க முடியாமல் தவித்து வருகிறது. ஏர்போர்ட்டை சுற்றிலும் வானிலேயே வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. அதேபோல சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாகவே புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நம்பர் கேம்
விமான நிலையத்தின் ஓடுதளத்தில் விமானங்கள் தரையிறங்கப் போராடுவதைப் போலவே, தமிழக அரசியலின் ஓடுதளத்தில் தவெக அரசு தரையிறங்கப் போராடி வருகிறது. 108 இடங்களில் ஆரம்பித்த நம்பர் கேம் இப்போது 116ல் வந்து நிற்கிறது. இந்த நம்பருடன் தவெக நிர்வாகிகள் ஆளுநர் மாளிகையைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர். ஆனால், ஆளுநரோ ஓகே சிக்னல் கொடுக்காமல் வெயிட்டிங் லிஸ்டிலேயே வைத்துள்ளார்.
வானத்தில் எப்படி 5 விமானங்கள் வட்டமடித்துக் காத்திருக்கிறதோ.. அதேபோல அரசியலில் விசிகவின் ஆதரவுக்காக தவெகவினர் காத்திருக்கிறார்கள். வானத்தில் கார்மேகங்கள் சூழ்ந்துள்ளதால் ஓடுதளம் தெரியாமல் விமானங்கள் தடுமாறுகிறது.. மறுபுறம் திருமாவளவனின் மௌன மேகங்களால், கோட்டைக்குச் செல்லும் பாதை தெரியாமல் தவெக தடுமாறுகிறது.
தரையிறங்கும்
வானத்தில் மழை நின்றால் விமானங்கள் தரையிறங்கும்.. அதேபோல அரசியலில் மவுனம் கலைந்து இழுபறி நீங்கினால் விஜய் தரையிறங்குவார் (பதவியேற்பார்). மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் சிக்னல் கிடைக்காததால் விமானங்கள் வானிலேயே சுற்றுகின்றன. அதேபோல், ராஜ்பவனில் கவர்னர் சிக்னல் கிடைக்காததால் விஜய்யின் பதவியேற்பு விழா ஹோல்டில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications