இதுதான் கிங்.. யாராலும் பக்கத்தில் கூட வர முடியாது.. தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி!
பெங்களூர்: ஆர்சிபி அணியின் ஜாம்பவான் வீரரான விராட் கோலி, ஐபிஎல் தொடரில் மற்றுமொரு இமாலய சாதனையைப் படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைத்துள்ளதோடு, தோனியின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ரகுவன்ஷி 46 பந்துகளில் 71 ரன்களை சேர்த்தார்.

இந்தப் போட்டியில் விராட் கோலி களமிறங்கியதன் மூலமாக பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் விராட் கோலி தனது 279வது போட்டியில் விளையாடி இருக்கிறார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வசம் இருந்த சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
ஒரு அணிக்காக விளையாடிய ஒரே வீரராகவும் விராட் கோலி சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனை மற்ற வீரர்களை விட மிகவும் தனித்துவமானது. ஏனெனில், ஐபிஎல் வரலாற்றில் 2008ஆம் ஆண்டு முதல் இன்று வரை 19 சீசன்களாக ஒரே அணிக்காக விளையாடி இந்த மைல்கல்லை எட்டிய ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே.
தோனி உள்ளிட்ட மற்ற வீரர்கள் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் விராட் கோலி 279 போட்டிகளில் விளையாடி முதலிடத்திலும், எம்.எஸ். தோனி 278 போட்டிகளில் விளையாடி 2வது இடத்திலும், ரோகித் சர்மா 278 போட்டிகளில் விளையாடி 3வது இடத்திலும் இருக்கின்றனர்.
ஏற்கனவே ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் (8,000-க்கும் மேல்), அதிக சதங்கள் மற்றும் ஒரு சீசனில் அதிக ரன்கள் எனப் பல சாதனைகளைத் தன் வசம் வைத்துள்ள கோலி, இப்போது அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் சேர்த்துள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 37 வயதிலும் அதே உடற்தகுதியுடன் விளையாடி வருவது இளம் வீரர்களுக்குப் பெரும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications