தமிழ்நாட்டில் கொரோனா பூஸ்டர் டோஸ் எப்போது? 'முதல் மாநிலமா இருப்போம்..' அமைச்சர் மா.சு உறுதி
சென்னை: உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்தால் 3ஆவதாக பூஸ்டர் டோஸ் போடும் பணிகளைத் தொடங்கும் முதல் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கும் எனத் தெரிவித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், இதற்காக மத்திய அரசு அளித்த வல்லுநர் குழு இதுவரை எந்த பரிந்துரையையும் அளிக்காததால் எந்த மாநிலத்திலும் இதன் பணிகள் தொடங்கப்படவில்லை என்றார்.
தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வரும் செப். 21ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தினமும் ஒவ்வொரு துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.

கவன ஈர்ப்பு தீர்மானம்
இந்நிலையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தனர். 2 டோஸ் போட்டவர்களுக்கு 3ஆவதாக பூஸ்டர் டோஸ் போடும் பணிகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடங்கியுள்ளதாகக் கூறிய விஜயபாஸ்கர், 2 டோஸ் போட்டவர்களுக்கு தடுப்பாற்றல் ஒரு ஆண்டு மட்டுமே இருக்கும் என்பதால் பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் அரசின் நிலைப்பாடு என்ன எனக் கேள்வி எழுப்பினார்.

97.5% பலன்
இதற்குப் பதிலளித்த மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஒன்றிய அரசு எந்தவித தடையும் இல்லாமல் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களில் வெகு சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் 97.5 சதவிகிதம் பேருக்கு மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை.

பூஸ்டர் டோஸ் வேக்சின்
குறிப்பாக கொரோனா வேக்சின் போட்டுக் கொண்டவர்கள் மத்தியில் உயிரிழப்புகள் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ்களை பொறுத்த வரையில் இதற்காக பல்வேறு வல்லுநர்களை உள்ளடக்கிய குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.. அந்த குழு இதுவரை பூஸ்டர் டோஸ் தொடர்பாக எந்தவொரு அறிக்கையையும் வழங்கவில்லை.
Recommended Video

முதல் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கும்
இதன் காரணமாகத் தமிழ்நாடு மட்டுமல்ல. இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் பூஸ்டர் டோஸ் தொடர்பான பூர்வாங்க பணிகள் தொடங்கப்படவில்லை. உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்தால் இரண்டு தவணை செலுத்தியவர்களுக்கு 3ஆவதாக பூஸ்டர் டோஸ் போடும் பணிகளைத் தொடங்கும் முதல் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications