பெட்ரோல் டீசல் விலை உயருகிறது.. 30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தகவல்
சென்னை: கடந்த ஒன்றாம் தேதி தான் வணிக சிலிண்டர் விலை கிட்டத்தட்ட 1000 ரூபாய் வரை உயர்ந்து இருந்தது. அதேபோல் கடந்த மாதம் தனியார் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டடிருந்தது. இந்நிலையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாதத்திற்கு ரூ. 30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல், டீசல் விலை உயர உள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வந்தது. இதன் காரணமாக சீனா, இங்கிலாந்து, நார்வே, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா, ஸ்பெயின் மற்றும் இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. ஆனால் இந்தியாவில் விலை உயர்த்தப்படவில்லை..

ஏனெனில் ஈரான் போர் தொடங்கிய ஆரம்ப நாட்களில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 126 டாலரை எட்டிய போதிலும், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையிலும், விலை குறைக்கப்படும் என்ற நம்பிக்கையிலும் விலை ஏற்றப்பபடவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 24-ம், ஒரு லிட்டர் டீசல் ரூ. 30-ம் ஏற்பட்ட கூடுதல் செலவை மத்திய அரசே ஏற்றுக்கொண்டது. அந்த நிலை இன்றும் தொடர்கிறது. மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிகளைக் குறைத்தது. இதனால் அரசு கருவூலத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
அதேபோல் எண்ணெய் நிறுவனங்களும் இழப்பை சந்தித்து வருகின்றன. எண்ணெய் விற்பனை நிறுவனங்களைப் பொறுத்தவரை, ஏப்ரல் மாத இறுதியில் அவற்றின் இழப்பு சுமார் ரூ. 30 ஆயிரம் கோடியாக இருந்தது என கூறப்படுகிறது. ஜூன் மாத இறுதியில் இந்த இழப்பு ரூ. 50 ஆயிரம் கோடியை எட்டக்கூடும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது சமையல் கேஸ் விற்பனை சார்ந்த இழப்பு மட்டும் சுமார் ரூ. 20 ஆயிரம் கோடியாக இருக்கிறது. தற்போது, இந்தியாவிடம் 5.33 மில்லியன் டன்கள் அளவிலான 'பெட்ரோலியக் கையிருப்பு' இருக்கிறது.
இது நாட்டின 15 நாட்களுக்கான எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாகும். இருப்பினும், ஜப்பான் மற்றும் தென் கொரியாவைப் போலவே, இந்த கையிருப்பு அளவை 30 நாட்களுக்கான தேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில் உயர்த்த அரசு திட்டமிட்டு சேமிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. அத்துடன் இந்தியாவின் தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்ய, தினமும் சுமார் 20 ஆயிரம் டன்கள் அளவிலான எண்ணெய் இறக்குமதி தேவைப்படுகிறது.
ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலைகள் உயர்வதோடு மட்டுமல்லாமல், எண்ணெய் இறக்குமதி நிறுவனங்கள் தற்போது கடல்வழிப் போக்குவரத்துக்கான காப்பீட்டுக் கட்டணங்களையும் 20 முதல் 30 சதவீதம் வரை கூடுதலாகச் செலுத்தி வருகின்றன. தற்போதைய நிதிநிலைமை, பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறதாம். எனினும் அப்படி விலை உயர்வு செய்தால், நாட்டின் மற்ற அனைத்துப் பொருட்கள் மீதும் ஒரு தொடர் விளைவை ஏற்படுத்தும். ஏனெனில், எரிபொருள் செலவுகள் அதிகரிப்பது போக்குவரத்து செலவுகளையும் உயர்த்தும் என்பதால் மத்திய அரசு தயங்கி வந்தது.
இதனிடையே மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில், 'இந்தியாவின் எண்ணெய் தேவையில் 88 சதவீதத்தைப் பூர்த்தி செய்ய இந்தியா சார்ந்திருக்கும் சர்வதேச சந்தைகளில் விலைகள் மிகவும் நிலையற்ற தன்மையுடன் இருப்பதோடு, விநியோகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. 2 மாதங்களுக்கு முன்பு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை சுமார் 70 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், தற்போது அது 120 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
விலைகளை நிலையாக வைத்திருப்பதும், நுகர்வோருக்கு விலையேற்றம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும் இதுவரை அரசு முயற்சி செய்து வருகிறது.. பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றை அவற்றின் உற்பத்திச் செலவை விடக் குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் அரசுக்குச் சொந்தமான எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் சந்திக்கும் இழப்புகள் அதிகமாக இருக்கிறது என்றார். எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றன. எனவே விரைவில் கணிசமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.














Click it and Unblock the Notifications