200 யூனிட் மின்சாரம் இலவசம் திட்டத்தில் கையெழுத்திட்ட CM விஜய்.. ஆனா இதை கவனிச்சிங்களா?
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முக்கிய முடிவு எடுத்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் அவர் கையெழுத்திட்டார்.

தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் விஜய், "ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்" என்று தெளிவாக அறிவித்திருந்தார். இந்த வாக்குறுதி மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் முக்கிய திட்டமாகக் கருதப்பட்டது.
பதவியேற்பு விழாவில் முதல்வராகப் பொறுப்பேற்ற உடனேயே இந்தத் திட்டத்தை முதல் கையெழுத்தாக நிறைவேற்றியது, "சொன்னதை செய்யும்" விஜயின் உறுதியை வெளிப்படுத்துகிறது.
புதிய திட்டத்தின் விவரங்கள்
இந்தப் புதிய திட்டப்படி, இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இது தமிழ்நாட்டின் மின்சாரத் துறையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும். முன்பு 100 யூனிட்டுக்கு மட்டுமே இலவச மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், இப்போது அதை 200 யூனிட்டாக உயர்த்தியுள்ளது மக்களுக்கு பெரும் நன்மையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் 500 யூனிட்க்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சார கிடைக்காது, தற்போது கிடைக்கும் பொதுவான 100 யூனிட் இலவச மின்சாரமும் கிடைக்காது.
நிதிச் சுமை
இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டின் மின்சாரத் துறை செலவு கணிசமாக அதிகரிக்கும் என நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்பு 100 யூனிட்டுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான மானியச் செலவு ரூ.7,752 கோடியாக இருந்தது.
இப்போது 200 யூனிட்டுக்கு உயர்த்தியதால் மானியச் செலவு ரூ.12,000 கோடியாக உயரும். இதனால் கூடுதலாக ரூ.4,248 கோடி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிதிச் சுமை புதிய அரசுக்கு முதல் கட்டத்தில் பெரும் சவாலாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்களின் எதிர்பார்ப்பு
விஜய் தலைமையிலான புதிய அரசு மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொறுப்பேற்றுள்ளது. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றிய இந்த முடிவு, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மக்கள் விஜயின் முதல் முடிவை வரவேற்றுள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டில் இந்த வாக்குறுதிகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications