DJ இசையின் அதிரடி: மாரடைப்பால் 140 கோழிகள் பலி! உரிமையாளர் கண்ணீர் மல்கப் புகார்!
ஒடிஸாவில் திருமண ஊர்வலத்தில் ஒலிக்கப்பட்ட அதிவேக 'டிஜே' (DJ) இசையின் அதிரடி தாளம் தாங்காமல், ஒரு கோழிப்பண்ணையில் இருந்த 140 கோழிகள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளன
புவனேஸ்வரம்: ஒடிஸாவில் திருமண ஊர்வலத்தில் ஒலிக்கப்பட்ட அதிவேக 'டிஜே' (DJ) இசையின் அதிரடி தாளம் தாங்காமல், ஒரு கோழிப்பண்ணையில் இருந்த 140 கோழிகள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளன.

சத்தமான இசை மனிதர்களுக்கு மட்டுமல்ல, வாயில்லாப் பிராணிகளுக்கும் எமனாக முடியும் என்பதற்குச் சான்றாக இந்த விசித்திரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ரஞ்சித் குமார் பரிடா என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, அவரது பண்ணைக்கு அருகே ஒரு திருமண ஊர்வலம் கடந்து சென்றுள்ளது.
அப்போது ஊர்வலத்தில் வைக்கப்பட்டிருந்த டிஜே இசைக் கருவிகள் காதுகளைச் கிழிக்கும் வகையில் மிக அதிக சத்தத்துடன் ஒலிக்கப்பட்டுள்ளன.
இசையின் அதிரடி சத்தம் தாளாமல் பண்ணையில் இருந்த கோழிகள் பயத்தில் அங்குமிங்கும் ஓடியுள்ளன. இதைக் கண்ட பண்ணை உரிமையாளர் ரஞ்சித், ஊர்வலமாக வந்தவர்களிடம் இசையின் சத்தத்தைக் குறைக்குமாறு கெஞ்சியுள்ளார்.
ஆனால், உற்சாகத்தில் இருந்தவர்கள் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து, சத்தத்தை மேலும் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அந்த அதிரடி சத்தம் நின்ற பிறகு, ரஞ்சித் பண்ணைக்குள் சென்று பார்த்தபோது அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பண்ணையில் இருந்த 140 கோழிகள் சுருண்டு விழுந்து கிடந்தன.
உடனடியாக கால்நடை மருத்துவரை வரவழைத்துப் பரிசோதித்ததில், அளவுக்கு அதிகமான சத்தத்தால் ஏற்பட்ட பயம் மற்றும் அதிர்ச்சியினால் (Heart Attack) கோழிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்தச் சம்பவத்தால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, திருமண வீட்டார் மீது ரஞ்சித் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். "எனது வாழ்வாதாரமே இந்தப் பண்ணைதான். இத்தனை கோழிகள் ஒரே நேரத்தில் பலியானது எனக்குப் பெரும் இழப்பு," என்று அவர் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
ஒலி மாசுபாடு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. விலங்குகள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகே அதிக சத்தத்துடன் பட்டாசுகள் வெடிப்பதையோ அல்லது இசைக்கருவிகளை இயக்குவதையோ தவிர்க்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications