இரவோடு இரவாக உரிமையாளரை கைது செய்த போலீஸ்.. 25 பேர் உயிரை பறித்த கோவா நைட் கிளப் தீ விபத்தில் அதிரடி
கோவா: கோவாவின் ஆர்போரா பகுதியில் அமைந்துள்ள நைட் கிளப்பில் சனிக்கிழமை இரவு மிக மோசமான தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். ஏற்கனவே நைட் கிளப் மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நைட் கிளப்பின் 4 உரிமையாளர்களில் ஒருவரான அஜய் குப்தாவை கோவா போலீசார் இப்போது கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் எப்போதும் பார்ட்டி நகரம் என்றாலே அது கோவா தான். அங்கு நைட் கிளப்களில் இரவு முழுக்க எப்போதும் பார்ட்டி நடக்கும். அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்களில் பார்ட்டி உச்சத்தைத் தொடும். அதன்படி கடந்த வாரம் அங்கு வட கோவாவின் ஆர்போரா பகுதியில் உள்ள நைட் கிளப் ஒன்றில் பார்ட்டி நடந்து வந்தது. அதில் பல்வேறு தரப்பினரும் பங்கேற்றிருந்தனர்.

கோவா தீ விபத்து
இந்தச் சூழலில் தான் சனிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் 25 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் அந்த கிளப்பில் வேலை செய்து வந்த ஊழியர்கள் என்பதும் தெரிய வந்தது. முதற்கட்ட விசாரணையில் நைட் கிளப்பில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது தெரிய வந்தது.
உரிமையாளர் கைது
இது தொடர்பாக ஏற்கனவே நைட் கிளப் மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து நைட் கிளப் ஓனரை தேடும் பணிகளும் தீவிரமாக நடந்து வந்தது. இந்தச் சூழலில் தான் விடுதியின் நான்கு உரிமையாளர்களில் ஒருவரான அஜய் குப்தாவை கோவா போலீசார் பிடித்துள்ளனர். அஜய் குப்தா மற்றும் இன்னொரு உரிமையாளரான சுரின்தர் குமார் கோஸ்லாவுக்கு எதிராக போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் விடுத்திருந்தனர். இந்தச் சூழலில் தான் அஜய் குப்தா கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெலியாக்கியுள்ளது.
இது தொடர்பாகக் கோவா போலீசார் கூறுகையில், "நைட் கிளப் உரிமையாளர்களில் ஒருவரான அஜய் குப்தாவை பிடித்துள்ளோம். இந்த வழக்கில் இதுவரை 5 பேரைக் கைது செய்துள்ளோம். 6வது நபராக இப்போது குப்தாவை கைது செய்திருக்கிறோம். அவர் டெல்லியில் இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்தே அவரை கைது செய்தோம். இப்போது அவரை கோவா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
தலைமறைவு
நைட் கிளப்பின் மற்ற உரிமையாளர்களான சௌரப் லூத்ரா மற்றும் கௌரவ் லூத்ரா தலைமறைவாக உள்ளனர். அவர்களுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்கில் நைட் கிளப் தலைமை மேனேஜர் ராஜீவ் மோடக், மேனேஜர் விவேக் சிங், பார் மேனேஜர் ராஜீவ் சிங்கானியா, கேட் மேனேஜர் ரியான்ஷு தாக்குர், ஊழியர் பாரத் கோலி என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னணி
முதலில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், போலீஸ் விசாரணையில் கேஸ் சிலிண்டர் காரணம் இல்லை என்பது தெரிய வந்தது. உள்ளே பட்டாசு வைக்கப்பட்டதாகவும் அதன் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. தீ காரணமாக ஏற்பட்ட கடுமையான புகையைக் காரணமாகவே மூச்சு திணறி உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications