கூட்டணியை பற்றி சிந்திக்க வேண்டிய நேரமிது.. கனிமொழி சொன்ன வார்த்தை.. மாற்றத்திற்கு தயாராகும் திமுக!
தூத்துக்குடி: திமுக தனது கூட்டணியை பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவை பலப்படுத்தினால், கூட்டணியே இல்லாமல் வெற்றி பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்த சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெக ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சி திமுக உடனான கூட்டணியை முறித்து கொண்டு தவெக உடன் கூட்டணியை அமைத்திருக்கிறது. அமைச்சரவையிலும் பங்கேற்க இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் லோக்சபா மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் தவெக உடன் கூட்டணி தொடரும் என்று அறிவித்துள்ளது.

விசிக தலைவர் திருமாவளவனும் திமுகவுக்கு எதிராக கருத்துக்களை பேசத் தொடங்கி இருக்கிறார். இதனால் லோக்சபா தேர்தலின் போது திமுக கூட்டணி கட்சிகள் கூட்டணியில் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடியில் நடந்த திமுக ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி பேசியுள்ள கருத்துக்கள் விவாதமாகி இருக்கிறது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கனிமொழி பங்கேற்றார். அப்போது கனிமொழி பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் நாம் அடைந்த தோல்வி குறித்து ஆராய வேண்டும்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். இதுவரை வெற்றி பெறாத கோவில்பட்டியில் ஒரு மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். ஆனால் தூத்துக்குடி சட்டசபைத் தொகுதியில் அடைந்த தோல்வி என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.
கீதா ஜீவன் மக்களோடு மக்களாக பணி செய்தவர். ஆனாலும் தோல்வி அடைந்துள்ளார். இனிமேல் தான் நாம் சிறப்பான பணியை செய்ய வேண்டும். யாரும் எதிர்பார்க்காத இந்த தோல்வி, கள நிலவரம் எது என்பதை புரியாமல் செய்து விட்டது. அதனால் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்திற்கு இரண்டு பேர் கொண்ட சிறப்பு குழுக்களை அமைத்து ஆராய உள்ளனர்.
இந்தக் குழுவிடம் உண்மை நிலவரங்களை மட்டுமே சொல்ல வேண்டும். சரியான கருத்துக்களை சொல்லும் போது தான் தலைமை முடிவெடுத்து கட்டமைப்பை மாற்ற முடியும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் போதும், இம்முறை தொகுதியை கூட்டணிக்கு கொடுத்துவிடாதீர்கள் என்று கூறுவார்கள். நானும் விளையாட்டாக, கூட்டணியே வேண்டாமா என்று கேட்பேன்.
ஆனால் கூட்டணி குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது. நம்மை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் யாரும் இல்லாமல் திமுக அனைத்து தொகுதிகளில் வெற்றி பெற முடியும். திமுக யார் என்பதை அனைவருக்கும் காட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார். கனிமொழியின் பேச்சு திமுகவினர் மத்தியில் விவாதமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications