குஜராத்தில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு.. அதிகாலையில் அதிர்ந்துபோன மக்கள்!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் குஜராத்தில் 4வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலநடுக்கத்தால் பாதிப்புகள் குறித்து இன்னும் முழுமையாக தகவல் வெளிவரவில்லை.
குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4ஆகப் பதிவாகி இருப்பதாக தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளி வரவில்லை.

இருப்பினும் அதிகாலை 4.30 மணிக்கு உணரப்பட்டதால், பொதுமக்கள் பலரும் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்தனர். இதையடுத்து சூழலை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், பெரியளவில் பொருள் சேதம் ஏற்படவில்லை என்று கருதப்படுகிறது. 2 வாரங்களுக்கு முன்பாக ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
டிசம்பர் 13ஆம் தேதி இதே கட்ச் மாவட்டத்தில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மூலமாக டிசம்பர் மாதத்தில் மட்டும் 4ஆவது முறையாக குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டம் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் அதிகமுள்ள பகுதியாக பார்க்கப்படுகிறது.
2001ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 13 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். இது சர்வதேச அளவில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் குஜராத் முழுமையாக வெளியில் வரவில்லை என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications