லைஃப் ஜாக்கெட் போட்டும் மகனை கட்டியணைத்தபடி தாய் நீரில் மூழ்கியது எப்படி? ஜபல்பூர் மர்மம் அவிழ்ந்தது!
போபால்: மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் லைஃப் ஜாக்கெட் போட்டும் தாயும் மகனும் நீரில் மூழ்கியது எப்படி என்பதற்கான மர்ம முடிச்சுகள் தற்போது அவிழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படகில் பயணிகளின் சிரிப்பு சப்தம் மரண ஓலங்களாக மாறியது எப்படி என்பதையும் பார்க்கலாம்.
மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூருக்கு அருகிலுள்ள நர்மதா ஆற்றின் பர்கி அணையில், சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான படகு கவிழ்ந்த விபத்தில், ஒன்பது பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் கடந்த 30ஆம் தேதி வியாழக்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது.

சுமார் 43 பயணிகள் மற்றும் படகு ஊழியர்களுடன் பயணித்த இந்தப் படகு, ஆற்றில் சென்று கொண்டிருந்தது. அங்கிருந்த இயற்கை அழகை ரசித்தபடியும் சிரிப்பலைகளுடனும் பயணிகள் சென்று கொண்டிருந்தனர்.
சூறாவளி காற்று
ரம்மியமாக, தாலாட்டியபடியே படகு சென்ற போது மாலை 6 மணியளவில் வானிலை மோசமாக மாறி, மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால் நிலைத்தடுமாறிய படகு அந்த ஆற்றில் கவிழ்ந்தது.
இதில் 15 பேருக்கு நீச்சல் தெரிந்ததால் அவர்கள் நீந்தியபடியே கரை சேர்ந்தனர் என சொல்லப்படுகிறது. ஆனால் மீதமுள்ளவர்கள் நீரில் மூழ்கினர். இது குறித்து பேரிடர் மீட்புத் துறைக்கு தகவல் கிடைத்து அவர்கள் வந்து நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மீட்பு பணியில் தொய்வு
அப்போது இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. அடுத்து நேற்று நடந்த மீட்பு பணிகளில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதில் 5 பேர் திருச்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் ஆவர். இந்த துயர சம்பவத்தில் தாயின் சடலம் தனது மகனை கட்டி பிடித்தபடியே மிதந்தது.
அந்த சடலங்கள் மீட்கப்பட்ட போது அதில் அந்த தாய் லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்தார். லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்தும் தாயும் குழந்தையும் இறந்தது எப்படி என பலருக்கு கேள்வியை எழுப்பியது. இந்த நிலையில்தான் தற்போது ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு குறைபாடு
அந்த வீடியோவை பார்க்கும் போது இது முழுக்க முழுக்க பாதுகாப்பு குறைபாடு என தெரியவருகிறது. பொதுவாக படகு சவாரிகளில் பயணிகளுக்கு லைஃப் ஜாக்கெட் (உயிர் காக்கும் கவசம்) கொடுக்க வேண்டும். ஆனால் இந்த படகு சவாரியில் யாருக்குமே லைஃப் ஜாக்கெட் முன்கூட்டியே கொடுக்கப்படவில்லை.
அந்த வீடியோவில் எல்லாரும் சிரித்து மகிழ்ந்தபடியே செல்கிறார்கள். அப்போது படகு மூழ்கிக் கொண்டிருக்கிறது, உடனை கண்ணிமைக்கும் நேரத்தில் தண்ணீர் உள்ளே புகுந்தது. அப்போதுதான் வேக வேகமாக படகு சவாரி நிர்வாகத்தினர் லைஃப் ஜாக்கெட் கட்டை பிரிக்கிறார்கள்.
லைஃப் ஜாக்கெட்
லைஃப் ஜாக்கெட்டை எல்லா பயணிகளுக்கு கொடுப்பதற்குள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது. லைஃப் ஜாக்கெட் கிடைத்த பயணிகளில் டெல்லியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கிடைத்தது. ஆனால் அந்த தாய்க்கு மட்டும் லைஃப் ஜாக்கெட் கிடைத்த நிலையில் அவருடைய மகனுக்கு கிடைக்கவில்லை. இதனால் மகன் நீரில் மூழ்கிவிடக் கூடாது என்பதற்காக அந்த தாய் தனது குழந்தையை லைஃப் ஜாக்கெட்டுக்குள் இணைத்துக் கொண்ட போதிலும் அவர்களால் தப்ப முடியவில்லை.
தாய் மகன்
தன்னிடம் லைஃப் ஜாக்கெட் இருந்ததால் எப்படியாவது தப்பிவிடலாம் என்ற எண்ணத்தில் தனது மகனை கட்டி அணைத்துக் கொண்டு வெளியேற முயற்சிகள் செய்தும் அவரும் அவரது மகனும் நீரில் மூழ்கி இறந்தனர். ஒரு வேளை அந்த சிறுவனுக்கும் லைஃப் ஜாக்கெட் கிடைத்திருந்தால் இன்று தாயும் மகனும் உயிருடன் இருந்திருப்பார்கள். இறந்தவர்கள் 39 வயதான மெரினா மாஸ்ஸி மற்றும் அவரது 4 வயது மகன் திரிஷான் என தெரியவந்தது. டெல்லியில் இருந்து விடுமுறைக்காக வந்த இவர்கள், படகு சவாரி சென்ற போது இந்த துயரம் நடந்தது.
இதுகுறித்து மாநில அமைச்சர் ராகேஷ் சிங் கூறுகையில், தாய்க்கும் மகனுக்கும் தனித்தனியே லைஃப் ஜாக்கெட் கிடைக்கவில்லை. ஒரே லைஃப் ஜாக்கெட் கிடைத்ததால் தனது மகனுடன் எப்படியும் உயிர் பிழைத்துவிடலாம் என எண்ணி குழந்தையை கட்டி அணைத்துக் கொண்டுள்ளார். ஆனாலும் அவர்கள் பலியாகிவிட்டனர் என்றார்.
கலங்கும் மக்கள்
தாய், மகனின் உடல்களை மீட்ட பேரிடர் மீட்பு துறை அதிகாரிகள் கூறுகையில், "தாயும் மகனும் கட்டி அணைத்தபடி சேற்றில் புதைந்திருந்தனர். இந்த காட்சியை பார்த்த போது மனதை உலுக்கிவிட்டது" என்றனர். மரணத்திலும் மெரினாவின் தாய்பாசம் என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கலங்கி வருகிறார்கள்.
படகு மூழ்கியது குறித்து உயிர் பிழைத்தவர்கள் கூறுகையில், படகு கவிழ்வதற்கு முன்பே பலத்த காற்று வீசியது. அப்போது படகை கரைக்கு திருப்புமாறு படகை இயக்கியவர்களிடம் சொன்னோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. அந்த படகு ஆற்றில் நடுவில் கவிழ்ந்தது. எங்களால் முடிந்தவரை 15 முதல் 16 பேரை காப்பாற்றினோம் என்றனர். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளதுடன், சம்பவம் குறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications