இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர்
அகர்தாலா: அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும். வாரம் 2 நாள் விடுமுறை விடப்படும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மற்ற 5 நாட்களில் வேலை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா அறிவித்துள்ளார்.
நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக திரிபுரா உள்ளது. இங்கு பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வர் மாணிக் சகா செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், தான் ஐடி நிறுவனங்கள் போல் தங்களுக்கும் வாரத்தில் 2 நாட்கள் வரை விடுமுறை கொடுக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வழங்கினால் தங்களால் Work-life balance-யை சரியாக கையாள முடியும் என்று கூறி வந்தனர்.
இந்நிலையில் தான் அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதல்வர் மாணிக் சாஹா நிறைவேற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களிலும் இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை வழங்கப்பட உள்ளது. இதற்கு முன்பு மாதத்தில் வாரத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டன. இனி அந்த 2 நாட்களும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. இதன்மூலம் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை தினம் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
மேலும் இதற்கு முன்பு தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அரசு அலுவலகத்தில் பணி நேரம் இருந்தது. தற்போது முன்கூட்டியே அலுவலகம் தொடங்கும். அதன்படி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அரசு அலுவலகங்கள் செயல்பட உள்ளது. இதன் மூலம் வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வழங்கினாலும் மக்களுக்கான அரசு பணிகள் மற்றும் நிர்வாகத் திறன் பாதிக்கப்படாமல், ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
திரிபுரா அரசின் இந்த முடிவுக்கு அரசு ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி தலைமைச் செயலகத்தின் மூத்த அதிகாரி துலால் தேப் கூறுகையில், "இது ஒரு முற்போக்கான நடவடிக்கை. மத்திய அரசு மற்றும் பிற மாநில ஊழியர்களுக்கு இணையாக திரிபுரா ஊழியர்களும் சிறப்பாகச் செயல்பட இது உதவும். இந்த புதிய நடைமுறையின் தொடக்கத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யும் ஊழியர்களுக்குச் சற்று சிரமமாக இருந்தாலும், விரைவில் அனைவரும் இந்த புதிய நேரத்திற்கு பழகிவிடுவார்கள்'' என்றார்
வனத்துறையைச் சேர்ந்த டாக்டர் குயின் சர்மா கூறுகையில், "மாதத்திற்கு நான்கு சனிக்கிழமைகள் விடுமுறை கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களின் பணித் திறனை (Productivity) அதிகரிக்க உதவும். இந்தச் சிறந்த முயற்சிக்கு அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications