Iran: 1.4 கோடி பேர் உயிர் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம்.. அமெரிக்கா கெடு முடியும் நிலையில், ஈரான் அதிபர் அறிவிப்பு
தெஹ்ரான்: ஹார்மூஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால் ஈரானை ஒரே இரவில் அழித்துவிடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து இருந்தார். டிரம்ப் விதித்த இந்த கெடு இன்னும் சில மணி நேரங்களில் முடிவுக்கு வர உள்ள நிலையில், ஈரானுக்காக நாட்டில் உள்ள 1.4 கோடி பேர் உயிர் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் மசூத் பெசஸ்கியான் கூறியுள்ளார். ஈரானின் மொத்த மக்கள் தொகை 9 கோடி பேர் என்பது கவனித்தக்க ஒன்றாகும்.
ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை உடனே திறக்க வேண்டும் என்றும் நாங்கள் விடுத்த 15 அம்ச திட்டத்தை ஏற்றுக்கொண்டு உடனே போர் நிறுத்தத்தை ஏற்க வேண்டும் என்று டிரம்ப் ஈரானுக்கு கெடு விதித்து இருந்தார்.

உயிர் தியாகம் செய்ய தயார்
அமெரிக்காவின் இந்த கெடுவை ஈரான் நிராகரித்து விட்டது. இதனால் கோபம் அடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று இரவு 8 மணிக்குள் (அமெரிக்க நேரப்படி) ஈரான் போர் நிறுத்த ஒப்பந்த்தத்தை ஏற்காவிட்டால் அந்த நாட்டின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் தவிடுபொடியாக்கப்படும் என்றும் ஒரே நாளில் ஈரானை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவோம் என்று எச்சரித்துள்ளார்.
ஈரான் போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்து வரும் நிலையில் டிரம்பின் இந்த எச்சரிக்கை உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களே இந்த கெடு உள்ள நிலையில் ஈரான் அதிபர் பெசஸ்கியான் தனது எக்ஸ் தளத்தில், ஈரானில் 1.4 கோடி பேர் உயிர் தியாகம் செய்ய இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
மின் நிலையங்களுக்கு அருகே
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- ஈரானை பாதுகாக்க ஒரு கோடியே 40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஈரானியர்களும் உயிர்த் தியாகம் செய்யவும் இருக்கிறோம். ஈரானுக்காக உயிர்த் தியாகம் செய்ய நானும் எப்போதும் தயாராக இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஈரான் இளைஞர்கள் அனைவரும் மனித சங்கிலியாக கைகோர்த்து மின்நிலையங்களை பாதுகாக்க திரள வேண்டும் என்று ஈரான் அமைச்சர் அழைப்பு விடுத்து இருந்தார். ஈரான் நாட்டு நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு இளைஞர்கள், கலைஞர்கள் விளையாட்டு வீரர்கள் என பல தரப்பினரும் மின் நிலையங்களுக்கு அருகில் கூடுமாறு கோருகிறேன்.
அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ள தயார்
அவை நமது வளங்கள்.. நமது உடமைகள் என்று ஈரான் அமைச்சர் அலிரேசா ரஹிமி அறிவித்து இருந்தார். அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ள உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்து இருப்பது பெரும் பதற்றத்தையும் பதைபதைப்பையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ஈரானின் எண்ணெய் உற்பத்தியில் இதயப்பகுதி போல விளங்கும் கார்க் தீவில் இன்று அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் கெடு முடிய இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், இந்த வெடி சத்தம் கார்க் தீவுகளில் கேட்டுள்ளது. ஏற்கனவே ஈரானை குறிவைத்து வளைகுடாவில் உள்ள தளங்களில் இருந்து அதி நவீன ஏவுகணைகளை அமெரிக்கா குவித்து வருகிறது. கார்க் தீவில் அமெரிக்காவே தாக்குதல் நடத்தியதாக அந்த நாட்டின் சீனியர் அதிகாரி உறுதிப்படுத்தியதாக அமெரிக்க இணைய செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications