"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு!
டெல் அவிவ்: ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரான் தளபதி அலிரேசா டங்சிரியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கியவர் அலிரேசா டங்சிரி! ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதால் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருந்த சூழலில், அவரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் தொடர்ந்து வருகிறது. 4வது வாரமாகப் போர் தொடரும் சூழலில், தற்போது வரை போர் முடிவுக்கு வருவது போலவே தெரியவில்லை. அமெரிக்கா மோதலை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் எடுத்தாலும் கூட இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதலை நடத்தியே வருகிறது. இது பதற்றத்தை அதிகரித்தே வருகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி
மேலும், போருக்கு பிறகு ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் அங்குச் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் வழியாகவே பெரும்பாலான கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி வர்த்தகம் நடக்கும் சூழலில், அது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவிலும் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
அலிரேசா டங்சிரி மரணம்
இந்தச் சூழலில் தான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரான் தளபதி அலிரேசா டங்சிரியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தெற்கு ஈரானில் நடந்த தாக்குதலில் ஈரானின் கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஈரானின் சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைப் பிரிவுக்குத் தலைமை வகித்த டங்சிரி.. பந்தர் அப்பாஸ் துறைமுக நகரில் நடந்த தாக்குதலில் டங்சிரி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதை மேற்பார்வையிடும் பணிகளை இவரே கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரான் மவுனம்
அதேநேரம் டங்சிரியின் மரணத்தை இதுவரை ஈரான் தரப்பு உறுதிப்படுத்தவில்லை. மேலும் இஸ்ரேல் தற்காப்புப் படைகளும் இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. இவரது மரணம் உறுதி செய்யப்பட்டால், இது ஈரான் ராணுவ தலைமைக்கு, குறிப்பாக அதன் கடற்படை நடவடிக்கைகளுக்கு ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
யார் இவர்
அலிரேசா டங்சிரி தெற்கு ஈரானில் உள்ள பூஷெர் மாகாணத்தில் பிறந்தவர். இவர் ஈரான்- ஈராக் போர் மற்றும் 1980களில் அமெரிக்காவுடன் ஈரான் மோதிய முதல் போரான "டேங்கர் போர்கள்" இரண்டிலும் பணியாற்றினார். இதன் மூலம் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை கடற்படையில் தனது பதவிகளை படிப்படியாக உயர்த்திக் கொண்டார். டங்சிரி, பந்தர் அப்பாஸில் உள்ள முதல் கடற்படை மாவட்டத்திற்குத் தலைமை தாங்கியதோடு, 2010 முதல் 2018 வரை துணைத் தளபதியாகவும், பின்னர் அப்படையின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் மீது ஒருங்கிணைந்த ராணுவத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த போர் தொடங்கியதிலிருந்து ஏகப்பட்ட மூத்த ஈரான் அதிகாரிகள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இந்த போரில் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அதன் பிறகு ஈரானில் உள்ள முக்கியமான அரசியல் மற்றும் ராணுவ தலைவர்கள் கொல்லப்பட்டனர். கமேனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மரணத்தைத் தொடர்ந்து போர் முடிந்துவிடும் என்றே பலரும் நினைத்தனர். இருப்பினும், இழப்பதற்கு எதுவுமில்லை என்ற சூழலுக்கு ஈரான் தள்ளப்பட்டுள்ளதால் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications