எமர்ஜென்சியை அறிவித்த குவைத்.. வளைகுடாவில் மீண்டும் போர் மேகங்கள்! இந்தியாவுக்கு மோசமான பாதிப்பு?
குவைத் சிட்டி: வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் தொடர்கிறது. தற்காலிக அமைதி பேச்சுவார்த்தை நாளையுடன் முடியும் நிலையில், எப்போது வேண்டும் என்றாலும் போர் வெடிக்கும் என்ற சூழலே இருக்கிறது. இதற்கிடையே மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத், தங்களால் திட்டமிட்டபடி கச்சா எண்ணெய் சப்ளை செய்ய முடியாது எனச் சொல்லி எமர்ஜென்சியை அறிவித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்துவிட்டது.
அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தாக்குதலை நடத்தியது. ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்த போர், இப்போது தான் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இதற்கிடையே மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் இப்போது உலக நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஈரான் அமெரிக்கா போர்
ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதலால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ள நிலையில், குவைத் அரசு தனது எண்ணெய் ஏற்றுமதியில் அவசரநிலையை அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
குவைத்
குவைத் அரசுக்குச் சொந்தமான குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், தனது வாடிக்கையாளர்களுக்கு 'ஃபோர்ஸ் மஜூர்' (Force Majeure) எனப்படும் அவசரக்கால ஒப்பந்த விதியைப் பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அதாவது, ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விநியோகிக்க முடியாது என்பதை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதனால், குவைத்தின் சேமிப்புக் கிடங்குகள் வேகமாக நிரம்பி வருகின்றன, ஆனால் ஏற்றுமதி செய்ய வழியில்லாமல் கப்பல்கள் முடங்கிக் கிடக்கின்றன.
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு (சுமார் 20%) இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. வளைகுடா நாடுகளான குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றவை இந்த வழித்தடத்தையே நம்பியுள்ளன. இப்போது அமெரிக்கப் படைகள் அந்த ஹார்முஸ் சந்தியை முடக்கியுள்ள சூழலில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
எகிறும் கச்சா எண்ணெய்
எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்தாலே, சர்வதேசச் சந்தையில் 'ரிஸ்க் பிரீமியம்' காரணமாகக் கச்சா எண்ணெய் விலை உடனடியாக உயரத் தொடங்கும். தற்போது குவைத்தின் இந்த அறிவிப்பு, உலகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ராக்கெட் வேகத்தில் உயர்த்த வாய்ப்புள்ளது. இந்த அறிவிப்பு வந்தவுடனேயே பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை நெருங்கி வருகிறது.
இந்தியாவுக்குப் பாதிப்பு
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. குவைத்தின் இந்த முடிவு இந்தியாவை இரு வழிகளில் பாதிக்கும்.. முதலில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயரக்கூடும். எரிபொருள் விலை உயர்வு என்பது நேரடியாகப் போக்குவரத்து மற்றும் சரக்குக் கையாளும் செலவை அதிகரிக்கும். இது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும், பணவீக்கத்திற்கும் வழிவகுக்கும்.
போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் முழுமையாகத் திறக்கப்படும் வரை எரிசக்திச் சந்தையில் நிலவும் இந்த நிச்சயமற்ற தன்மை தொடரும். இது இந்தியா போன்ற இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள், குறிப்பாக ஆசிய நாடுகளுக்கு ஒரு பெரும் சவாலாகும்.












Click it and Unblock the Notifications