அடங்காத ஈரான்.. மீண்டும் கப்பல்கள் மீது சரமாரி தாக்குதல்.. வளைகுடாவை மீண்டும் சூழும் போர் மேகங்கள்!
தெஹ்ரான்: ஈரான் மீதான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணி நேரங்களிலேயே, ஹார்முஸ் ஜலசந்தியில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்களைச் சூழச் செய்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் போரை ஆரம்பித்தது. ஒரு மாதத்திற்கு மேலாக நீட்டித்த இந்த போர் இந்த மாதம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இரு தரப்புமே பேச்சுவார்த்தைக்குச் சம்மதித்தன. பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடந்த போதிலும், இரு தரப்பிற்கும் இடையே எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால் போர் மீண்டும் வெடிக்கும் சூழல் உருவானது.

தாக்குதல்
இந்தச் சூழலில் தான் ஈரான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதாக டிரம்ப் அறிவித்தார். இதற்கிடையே டிரம்ப் இதுபோல அறிவிப்பை வெளியிட்ட கொஞ்ச நேரத்திலேயே அங்கிருந்த கப்பல்களை ஈரான் மீண்டும் தாக்கியுள்ளது. இதனால் வளைகுடா பகுதியில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. பிரிட்டிஷ் ராணுவத்தின் கடல்சார் வர்த்தகச் செயல்பாட்டு மையம் தாக்குதல் குறித்த தகவல்களை உறுதி செய்துள்ளது. ஈரானுக்கு அருகே சென்ற போதே இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.

அதாவது முதல் தாக்குதல் காலை 7:55 மணியளவில் ஈரானின் புரட்சிகர காவல் படை, ஒரு கன்டெய்னர் கப்பல் மீது எந்தவித முன்னறிவிப்புமின்றி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் கப்பல் சேதமடைந்தாலும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இரண்டாவது தாக்குதலைப் பொறுத்தவரை மற்றொரு சரக்குக் கப்பல் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால், அது கடலிலேயே நிறுத்தப்பட்டது. இங்கும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

ஈரான் என்ன சொல்கிறது
இந்தத் தாக்குதல்களை ஈரானும் உறுதி செய்துள்ளன. இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தி தங்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதை உலகிற்கு உணர்த்த ஈரான் செய்த சட்டப்பூர்வமான நடவடிக்கை என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

டிரம்ப்
போர்நிறுத்தத்தை நீட்டித்தாலும், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் கடல்சார் முற்றுகையை விலக்கப் போவதில்லை என ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும், "ஈரான் நிதி ரீதியாகச் சரிந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு உடனடியாகப் பணம் தேவைப்படுகிறது, அதனால் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் துடிக்கிறார்கள்" என ட்ரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவின் முற்றுகையால் துறைமுகங்கள் முடங்கியுள்ள நிலையில், ஈரான் தனது கவுரவத்தைக் காப்பாற்றவே இந்தத் தாக்குதல்களை நடத்துவதாக அமெரிக்கத் தரப்பு விமர்சிக்கிறது.
அடுத்து என்ன
உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் 20 சதவீதம் இந்த குறுகிய ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இங்கே கப்பல் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா ஈரானின் சில கப்பல்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், பதிலுக்கு ஈரான் கப்பல்களைத் தாக்கியிருப்பது சர்வதேச எரிசக்திச் சந்தையில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்திருப்பதாக ஒருபுறம் கூறப்பட்டாலும், களத்தில் துப்பாக்கிச் சத்தங்கள் ஓயவில்லை. அமெரிக்காவின் பொருளாதார முற்றுகை ஈரானை ஒரு இறுக்கமான நிலைக்குத் தள்ளியுள்ளது. ஈரானின் இந்த ஆக்ரோஷமான பதிலடி, ஒரு பெரிய போருக்கு வழிவகுக்குமா அல்லது பேச்சுவார்த்தைக்கு அவர்களைக் கொண்டு வருமா என்பதே இப்போது உலகம் உற்றுப் பார்க்கும் கேள்வியாக உள்ளது.!












Click it and Unblock the Notifications