ஓய்வறையில் இ-சிகரெட்.. மைதான விதிகளை கூட மதிக்காத ரியான் பராக்.. சீனுக்குள் வந்த பிசிசிஐ!
மும்பை: ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் ஓய்வறையில் அமர்ந்து கொண்டு இ-சிகரெட் பிடித்தது தொடர்பாக பிசிசிஐ விளக்கம் கேட்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரியான் பராக் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றாலும், அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் சர்ச்சையில் சிக்கினார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது, டிரெஸ்ஸிங் ரூமில் அவர் 'வேப்பிங்' (Vaping) செய்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வேகமாக பரவியது.

ராஜஸ்தான் அணி பேட்டிங்கின் போது, 16ஆவது ஓவரில் கேமராக்கள் டிரெஸ்ஸிங் ரூம் பக்கம் திரும்பின. அப்போது ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் சக வீரர்களான துருவ் ஜூரல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேசிக் கொண்டிருந்தவாறே, சாவகாசமாக 'வேப்' (E-cigarette) பயன்படுத்தும் காட்சிகள் லைவில் பதிவாகின. இந்த வீடியோ வெளியான உடனேயே, இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.
ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் இத்தகைய பொருட்களைப் பயன்படுத்துவது ஒழுக்கக் கேடாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரத்தை பிசிசிஐ மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. ஒரு அணியின் கேப்டனாக பொறுப்பான பதவியில் இருக்கும் வீரர், இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
ஆனால், இத்தகைய செயல்கள் விளையாட்டின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் இருப்பதாக பிசிசிஐ அதிகாரிகள் கருதுகின்றனர். இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் கூறுகையில், ஓய்வறையில் வீரர்கள் பின்பற்ற வேண்டிய சில நடத்தை விதிகள் உள்ளன. இந்த விவகாரம் குறித்து ரியான் பராக்கிடம் முறைப்படி விளக்கம் கேட்கப்படும்.
அவரது பதில் திருப்திகரமாக இல்லையெனில், விதிமுறைகளின்படி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும், அணியின் கேப்டனே இத்தகைய சர்ச்சையில் சிக்கியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஏற்கனவே தனது அதிரடியான பேட்டிங் மற்றும் களத்தில் காட்டும் ஆக்ரோஷமான உடல் மொழியால் பலமுறை விமர்சனங்களுக்கு உள்ளான ரியான் பராக், இப்போது இந்த 'வேப்பிங்' புகாரில் சிக்கியிருப்பது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு சவாலான கட்டத்தை உருவாக்கியுள்ளது. ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் ரஞ்சித் பர்தாகூர் அவரின் சொந்த மாமா என்பதால், அந்த அணிக்கு ரியான் பராக் எளிதாக கேப்டனாகி இருப்பதும் பேசுபொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications