சிவம் மாவி காயம்.. தமிழக வேகப்பந்துவீச்சாளரை தட்டி தூக்கிய காவ்யா மாறன்.. SRHக்கு ஜாக்பாட்!
ஐதராபாத்: ஐதராபாத் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான சிவம் மாவி காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக தமிழக வீரரை அந்த அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. யு19 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட அம்ப்ரிஷ் அடிப்படை விலையான ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் பாதி சீசன் முடிவடைந்துவிட்ட சூழலில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறக் கூடிய அணிகள் ஏறக்குறைய முடிவாகிவிட்டது. அந்த வகையில் ஐதராபாத் அணி 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்வி உட்பட 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது. இஷான் கிஷன் சிறப்பாக அணியை வழிநடத்தியதோடு, தற்போது பேட் கம்மின்ஸும் அணிக்கு திரும்பி இருக்கிறார்.

இதனால் ஐதராபாத் அணி புதிய உத்வேகத்துடன் விளையாடி வருகிறது. இந்த நிலையில் ஐதராபாத் அணியின் முக்கிய வீரர்கள் தொடர்ச்சியாக காயத்தில் சிக்கி வருகின்றனர். ஏற்கனவே பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக 7 போட்டிகளில் விளையாடவில்லை. இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே ஜாக் எட்வர்ட்ஸ் காயம் காரணமாக விலகினார். இதனால் மாற்று வீரராக டேவிட் பெய்ன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
தற்போது இந்திய இளம் வேகப்பந்துவீச்சாளர் சிவம் மாவியும் காயத்தில் சிக்கி இருக்கிறார். பயிற்சியின் போது சிவம் மாவியின் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐதராபாத் அணி நிர்வாகம் இந்திய யு19 அணிக்காக ஆடிய அம்ப்ரிஷை உடனடியாக ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது.
மீடியம் ஃபாஸ்ட் பவுலரான அம்ப்ரிஷ், யு19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர். தமிழ்நாட்டைச் சேர்ந்த அம்ப்ரிஷ், தமிழ்நாடு ரஞ்சி அணிக்காக விளையாடி பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். இந்த நிலையில் ஐதராபாத் அணி அம்ப்ரிஷை தட்டி தூக்கி இருக்கிறது.
ஏற்கனவே யு19 உலகக்கோப்பையில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே உள்ளிட்டோர் தங்களின் திறமையை நிரூபித்துவிட்டனர். தற்போது பவுலரான அம்ப்ரிஷ்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இருந்தாலும் அம்ப்ரிஷ்-க்கு ஐதராபாத் அணியின் பிளேயிங் லெவனில் சான்ஸ் கிடைக்குமா என்பதே கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications