ஜெயிச்சாலும் பாருங்க கொண்டாட முடியல.. அந்த '49' ரன் சாதனையை முறியடிக்க முடியலையே! ரசிகர்கள் புலம்பல்
பெங்களூர்: பொதுவாகவே ஆர்சிபி அணி வெற்றி பெற்றால் இணையதளமே அதிரும், பெங்களூர் வீதிகள் கொண்டாட்டம் திருவிழா போல கலைக்கட்டும். இன்றைய தினம் டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற போதிலும், அதற்குக் கிடைத்த ரியாக்ஷன்கள் கொஞ்சம் விசித்திரமானவை. டெல்லியைத் துவம்சம் செய்து பிறகும் கூட ஆர்சிபி ரசிகர்கள் முகத்தில் ஒருவித ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்
ஐபிஎல் போட்டிகள் இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையே ஐபிஎல் தொடரின் 39-வது லீக் போட்டியில் இன்று டெல்லி கேபிடல்ஸ் (DC) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியை ஆரம்பத்திலிருந்தே ஆர்.சி.பி பந்துவீச்சாளர்கள் பாடாய்ப்படுத்தினர். பெங்களூரு பந்துவீச்சாளர்களின் அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் டெல்லி பேட்டர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

ஆசை
ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் டெல்லி அணி வெறும் 8 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது. இதைப் பார்த்தவுடன் மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கும், சோஷியல் மீடியா வாசிகளுக்கும் ஒரு ஸ்பார்க் உருவானது. அதுதான் ஆர்.சி.பி-யின் அந்தப் பழைய '49 ஆல் அவுட்' சாதனை! ஐபிஎல் வரலாற்றிலேயே மிகக்குறைந்த ஸ்கோர் என்ற அந்தப் பெயரைத் தாங்கி நிற்கும் ஆர்சிபி ரசிகர்கள், இன்று அந்த 'பெயரை' டெல்லிக்கு மாற்றிவிடலாம் என ஆவலோடு காத்திருந்தனர். 8 ரன்களுக்கே 6 விக்கெட்டுகள் விழுந்ததால், டெல்லி அணியை 49 ரன்களுக்கு உள்ளேயே சுருட்டிவிட முடியும் என எதிர்பார்த்தனர்.
ட்விஸ்ட் கொடுத்த டெல்லி
ஆனால், அங்கதான் ஒரு ட்விஸ்ட்! டெல்லி அணியின் அபிஷேக் போரல் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி நிதானமாக விளையாடி ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஆர்.சி.பி ரசிகர்கள் "சீக்கிரம் அவுட் பண்ணுங்கப்பா" என வேண்டிக் கொண்டிருக்க, இந்த ஜோடி டெல்லியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தியது. டேவிட் மில்லர் அவுட் ஆன பிறகும், கைல் ஜேமிசன் துணையோடு அபிஷேக் போரல் நிதானமாக விளையாடவே, டெல்லி அணி 43 ரன்களைத் தாண்டியது. இறுதியில் டெல்லி 75 ரன்கள் வரை சென்றுவிட்டது.
ஏமாற்றம்
76 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆர்சிபி அணி வெறும் 6.3 ஓவர்களில், ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து எட்டிப் பிடித்தது. 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி, புள்ளி பட்டியலில் கெத்தாக 2வது இடத்தை உறுதி செய்தது என்றாலும் அந்த '49 ஆல் அவுட்' என்ற கறையைத் துடைக்கும் வாய்ப்பு நழுவியதுதான் ரசிகர்களின் மிகப் பெரிய ஆதங்கமாக இருக்கிறது. இதன் காரணமாகவே இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகும் ஆர்சிபி ரசிகர்கள் முகத்தில் ஒருவித ஏமாற்றம் இருக்கிறது. சமூக வலைத்தளங்களிலும் கூட இது தொடர்பாக ஏகப்பட்ட போஸ்ட்களை பார்க்க முடிகிறது.
கை நழுவிப்போன 'வரலாற்று' வாய்ப்பு
இன்று ஆர்.சி.பி-க்குக் கிடைத்த இந்த வெற்றி மகத்தானது என்ற போதிலும் பல ஆண்டுகளாக தங்களைச் சீண்டி வரும் அந்த 49 ரன் சாதனையை வேறொரு அணியின் தலையில் கட்டும் அரிய வாய்ப்பைத் தவறவிட்டதை ஆர்.சி.பி ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த ஐபிஎல் சீசனில் கலக்கினாலும் கூட, வரலாற்றின் அந்த மோசமான பக்கத்தை மாற்றத் தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications