மீண்டு வருவேன்! மருத்துவமனை படுக்கையிலிருந்து புகைப்படத்தை வெளியிட்ட ரியான் பராக்.. என்ன நடந்தது?
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல்-ரவுண்டரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரியான் பராக் தனது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாகப் பிரத்யேக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கிரிக்கெட் களத்திற்குத் திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், தற்காலிகமாக விளையாட்டிலிருந்து விலகி ஓய்வெடுக்கத் தொடங்கியுள்ளார்.
அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், மருத்துவமனையில் இருந்து தனது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ரியான் பராக். கடந்த இரண்டு ஆண்டுகால தனது இந்திய கிரிக்கெட் பயணம் குறித்து மிகவும் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அறுவைச் சிகிச்சை முடிந்து மீண்டு வரும் 24 வயதான ரியான் பராக், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனைப் படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், கடந்த இரண்டு ஆண்டுகள் நம்ப முடியாத அளவிற்கு அற்புதமான ஒன்றாக அமைந்தன. இந்திய அணிக்காக விளையாடியது, பல ஏற்ற இறக்கங்களைக் கண்டது என அனைத்தும் என் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது. இப்போது இந்தச் சிறிய இடைவேளை எனக்குத் தேவைப்படுகிறது. எனது தோள்பட்டை அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
இதிலிருந்து முழுமையாகக் குணமடைந்து, முன்பை விட அதிக பலத்துடன் மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்புவேன். நாம் அனைவரும் களத்தில் சந்திப்போம் என பதிவிட்டுள்ளார். 2024 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 573 ரன்கள் குவித்து அசத்தியதைத் தொடர்ந்து, பயிற்சியாளர் கெளதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய வெள்ளைப்பந்து அணியில் ரியான் பராக் முக்கிய இடத்தைப்பிடித்தார்.
இலங்கை மற்றும் வங்கதேசத் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவருக்கு, இந்தத் தோள்பட்டை காயம் தற்காலிகத் தடையாக அமைந்துள்ளது. பெங்களூரில் உள்ள பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இவருக்கான சிறப்பு மருத்துவக் குழு கண்காணிப்பில் உடற்தகுதி பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளன. தொடர்ந்து ரியான் பராக் விரைவாக குணமடைய வேண்டும் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்












Click it and Unblock the Notifications