300 விக்கெட்ஸ்.. சாஹல் படைத்த பிரம்மாண்ட சாதனை.. ரஷீத் கான், சுனில் நரைன் கூட செய்யாத ரெக்கார்ட்!
சண்டிகர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலமாக புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். ஒரே நாட்டில் 300 டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை சாஹல் படைத்துள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்களை சேர்த்தது,. சிறப்பாக ஆடிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 22 பந்துகளில் 6 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 62 ரன்களை விளாசினார்.

இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய டோனவன் ஃபெரேரா 26 பந்துகளில் 5 ரன்களையும், ஜெய்ஸ்வால் 27 பந்துகளில் 51 ரன்களையும், வைபவ் சூர்யவன்ஷி 16 பந்துகளில் 43 ரன்களையும், சுபம் துபே 12 பந்துகளில் 31 ரன்களையும் விளாசினர்.
இந்த சீசனில் பஞ்சாப் அணி அடைந்த முதல் தோல்வியாக இது அமைந்தது. அதேபோல் பஞ்சாப் அணியை எப்படி வீழ்த்த வேண்டும் என்ற ப்ளூபிரிண்ட்டை மற்ற அணிகளுக்கு ராஜஸ்தான் அணி போட்டு கொடுத்துள்ளது. இருப்பினும் பஞ்சாப் அணிக்காக ஆடிய சாஹல் 4 ஓவர்களில் 36 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தப் போட்டியின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலமாக யுஸ்வேந்திர சாஹல் பிரம்மாண்ட சாதனை ஒன்றை படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் ஒரே நாட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை சாஹல் பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் 228 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சாஹல், இந்திய அணிக்காக 96 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
ரஷீத் கான், பிராவோ, சுனில் நரைன் உள்ளிட்ட வீரர்கள் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும், அவர்கள் ஒரே நாட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை. அவர்களால் ஐபிஎல் மட்டுமல்லாமல் சிபிஎல், எஸ்ஏ20, ஐஎல்டி20, எம்எல்சி உள்ளிட்ட பல்வேறு தொடர்களிலும் தொடர்ச்சியாக விளையாடி அதிக விக்கெட்டுகளை சாய்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications